பதிவு செய்த நாள்
17
நவ
2017
12:11
திருப்போரூர் : திருப்போரூரில், கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 2.5 சென்ட் நிலம் அறநிலைத் துறையினரால் மீட்கப்பட்டது. திருப்போரூர் காவல் நிலையம் அருகே கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், 2.5 சென்ட் நிலத்தை, அப்பகுதியில் உள்ள ஒருவர் ஆக்கிரமித்து, கட்டுமான பணிகளை நடத்தி வருவதாக, கோவில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அப்பகுதிக்கு சென்ற நிர்வாகத்தினர், கட்டுமான பணிகளை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து, இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின், கோவில் நிர்வாகத்தினர், திருப்போரூர் வருவாய் அதிகாரிகளை அழைத்து சென்று, நிலத்தை அளந்ததில் அது கோவிலுக்கு சொந்தமான நிலம் என உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, அப்பகுதியில் நடந்த கட்டுமான பணிகளை நிறுத்திய கோவில் நிர்வாகத்தினர், அங்கு அறிவிப்பு பலகையையும் வைத்தனர். நிலத்தின் மதிப்பு, 25 லட்சம் என கூறப்படுகிறது.