பதிவு செய்த நாள்
18
நவ
2017
12:11
ஈரோடு: கார்த்திகை முதல் நாளான நேற்று, ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள், மாலையணிந்து விரதம் தொடங்கினர். சபரிமலை ஐயப்பன் கோவிலில், ஆண்டு தோறும், கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி, தை ஒன்று வரை, மண்டல பூஜை நடக்கிறது. இதில் சுவாமி ஐயப்பனை, தரிசனம் செய்ய, யாத்திரை புறப்படும் பக்தர்கள், மாலை அணிந்து, 48 நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். கார்த்திகை நேற்று பிறந்ததால், ஈரோடு கருங்கல்பாளையாம் காவிரி ரோட்டில் உள்ள, ஐயப்பா சேவா நிறுவன ஐயப்பன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, விரதம் தொடங்கினர். கோவில் தலைவர் கேசவன், குருசாமி அருணாசலம் மாலை அணிவித்தனர். இதேபோல், ஈரோடு ரயில்வே காலனி சித்தி விநாயகர் கோவில், சக்தி விநாயகர் கோவில், ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோவில்களிலும், ஏராளமான பக்தர்கள் மாலையணிந்தனர்.
* கோபி வேலுமணி நகரில் உள்ள, ஐயப்பன் கோவிலில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். கோபி, ஓடத்துறை, குள்ளம்பாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குருமந்தூர், அளுக்குளி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த, 350 பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதில், ??க்கும் மேற்பட்ட பக்தர்கள், இருமுடிகட்டி கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர்.
* புன்செய்புளியம்பட்டி, நேருநகரில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு சபரிமலை போல், 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டல கால பூஜையை முன்னிட்டு, கார்த்திகை முதல் நாளான நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஐயப்பனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, நெய் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, மஹா தீபாராதனை நடந்தது. தர்மசாஸ்தா ஐயப்பன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். சபரிமலை செல்லும் பக்தர்கள் குருசாமி கையால், மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.