பதிவு செய்த நாள்
23
நவ
2017
10:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தீபத் திருவிழா, இன்று(நவ.,23) கொடியேற்றத்துடன் துவங்கியது. முதல் நாள் நிகழ்வாக, இன்று அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் மற்றும் பஞ்ச உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அதிகாலை, தங்க கொடி மரத்தில், கொடியேற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில் 62 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தின் முன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷமிட அதிகாலை 4.57 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இதில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பராசக்தியம்மன் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் கொடியேற்றத்தை கண்டு “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி கோஷம் எழுப்பி பத்கர்கள் தரிசனம் செய்தனர். தங்க கொடிமரத்தின் முன் பராசக்தியம்மன் முதல் முறையாக வைர மூக்குத்தி அணிந்துக்கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.