பதிவு செய்த நாள்
27
நவ
2017
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கார்த்திகை தீப திருவிழா தகவல்களை தெரிந்து கொள்ள வசதியாக, மொபைல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா, கடந்த, 23ல், கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. டிச., 2ல் நடக்க உள்ள மஹா தீபம், 3ல் பவுர்ணமி கிரிவலத்திற்கு, 20 லட்சம் பக்தர்கள் வருவர். இவர்களுக்கு தேவையான வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கார்த்திகை தீப திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகளை, பக்தர்கள் எளிதில் தெரிந்து கொள்ள வசதியாக, இந்த ஆண்டு, ஹலோ திருவண்ணாமலை எனும் மொபைல்போன் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்பை மொபைல்போனில் பதிவேற்றம் செய்து, கூகுள் வழியாக அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம். அதோடு, அனைத்துத்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்கள், கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண், புகார்களை பதிவு செய்யும் வசதி போன்றவை இடம் பெற்றுள்ளன. மேலும், தீப திருவிழா தொடர்பான தகவல்களை பெற, புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்க வசதியாக, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் இயங்கும் தீப திருவிழா கட்டுப்பாட்டு அறையின், 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி அல்லது 04175-232377, 041752-32261 என்ற கட்டண தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். டிச., 4 வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.