பதிவு செய்த நாள்
30
நவ
2017
12:11
தர்மபுரி: தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. இதை முன்னிட்டு, எஸ்.வி., சாலை விநாயகர் கோவிலில் இருந்து, பெண்கள் முளைப்பாரி மற்றும் கலசகுடம் எடுத்தும், பக்தர்கள் சுவாமி வேடம் அணிந்தும் ஊர்வலமாக வந்தனர். மகாத்மா காந்தி சாலை, கடைவீதி, பழைய திருப்பத்தூர் சாலை, நான்கு ரோடு வழியாக ஊர்வலம் கோவிலை சென்றடைந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு, மஹா கணபதி பூஜை மற்றும் ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், யாகசாலை சுத்தி நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜையும், மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும் நடக்கிறது. நாளை காலை, 9:30 மணிக்கு, கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு, திருமணக்கோலத்தில், அம்மையப்பன் திருவீதி உலா நடக்கிறது.