பதிவு செய்த நாள்
01
டிச
2017
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், மஹா தீபம் ஏற்ற, நெய் குடம் கட்டி, பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக சிறப்பு கவுன்டர் திறக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடந்து வருகிறது. நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளன. பக்தர்கள், இதுவரை நெய் காணிக்கைக்கு, கோவில் நிர்வாகத்தில் பணமாக செலுத்தி வந்தனர். இந்நிலையில், நேரடியாக நெய்யாக கொண்டு வந்து செலுத்துபவர்களுக்கு வசதியாக, ராஜகோபுரம் அருகே திட்டி வாயிலில், நேற்று தனி கவுன்டர் துவங்கப்பட்டது. இங்கு வைக்கப்பட்டுள்ள மண்பானை குடத்தில், பக்தர்கள் நெய் கொண்டு வந்து ஊற்றி வருகின்றனர். இந்த நெய், நாளை மஹா தீபம் ஏற்றும்போது பயன்படுத்தப்படும் என, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.