பதிவு செய்த நாள்
01
டிச
2017
11:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில், நாளை, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதில், 3,500 கிலோ நெய் கொண்டு, 1,000 மீட்டர் காடா துணியில், ராட்சத திரி தயார் செய்து, மஹா தீபம் ஏற்றப்படும். இதற்காக பிரத்யேகமாக, திருப்பூரிலிருந்து முதல் தர பருத்தியில் தயாரிக்கப்பட்ட காடா துணி, நேற்று திருவண்ணாமலை கோவிலுக்கு வந்தது. இந்த துணிக்கு சிறப்பு பூஜை செய்து, மாட வீதியில் மேளதாளம் முழங்க, கோவிலில், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து, பாதுகாப்பாக கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இவை, நாளை காலை, 8:00 மணிக்கு மலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும் என, கோவில் அதிகாரிகள் கூறினர்.