பதிவு செய்த நாள்
08
டிச
2017
03:12
பண்ருட்டி: பண்ருட்டி அருகே 480 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருமூலநாதர் திருக்கோவில் பராமரிப்பின்றி சிதலமடைந்து பூஜை செய்ய முடியாத நிலையில் உள்ளது. பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை கிராமத்தில் சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்ட மரகதாம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் சிதலமடைந்து பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து இடிந்து விழுந்துள்ளது.
இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர் ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர், சேந்தமங்கலம் பகுதியில் நாடாண்ட காடவராய மன்னர்கள் விஜயநகர மன்னர் ஆட்சிகாலத்தின் போது கட்டப்பட்டது. கோவிலில் திருமூலநாதர் மூலவர் சிவலிங்கம், விநாயகர், சூரியன், முருகர், நந்திபகவான் ஆகிய சிலைகள் மட்டுமே மிஞ்சியுள்ளன.
மூலவர் அம்பாள் மரகதாம்பாள் சிலை காணகிடைக்கவில்லை. கி.பி.16 ம் நுாற்றாண்டில் இப்பகுதியில் ஆட்சிபுரிந்த விஜயநகர அரசரின் கல்வெட்டும், சோழர் கால கல்வெட்டுத்துண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. இதுகுறித்து பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் தினமலர் நிருபரிடம் கூறியதாவது : மரகதாம்பாள் கோவிலில் உள்ள கல்வெட்டில் இது கி.பி. 1520 – 1570 ம் ஆண்டில் ஆட்சி புரிந்த சதாசிவ தேவ மகாராயரின் கல்வெட்டு என அறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் தனது முன்னோர்களின் விருது பெயர்களையும் தமிழகத்தின் மீது போர் தொடுத்த முகமதியர்களை வெற்றி கொண்ட செய்தியை மன்னர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீமான் மகா மண்டலேசுவரன் மேதினி மீ சுரகண்ட கட்டார சாளுவன் நியாய விபாடன் பாஷைக்கு தப்புவராயகண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் துலுக்கர் தளவிபாடன், துலுக்கர் மோகந்தவிர்த்தான்’ எனும் மெய்கீர்த்திகளை கொண்டு துவங்கும் இக்கல்வெட்டு செய்த திருப்பணிகளை கூறுகிறது.
இக்கோவிலுக்குள் வீரன் என்று வணங்கப்பட்டு வந்த ஒரு கருங்கற் சிலையை ஆய்வு செய்த போது அது வீரன் சிலை அல்ல. இக்கோவிலுக்கு திருப்பணி செய்து நிலக்கொடையளித்த சதாசிவ தேவமகாராயரும் அவரது பட்டத்தரசியும் கொண்ட சிற்பம் என கண்டறியப்பட்டது. கோவிலின் கருவறையின் தென்புற அடிப்புறத்தில் இடம்பெற்றுள்ள ஒரு துண்டுத்கல்வெட்டு சோழர் கால எழுத்தமைதி கொண்டு கோவிலுக்கு வழங்கிய நிலதானத்தை தெரிவிக்கிறது. சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருமூலநாதர் கோவில் பிற்காலத்தில் கட்டப்பட்ட அழிவுற்றிருந்த போது பாண்டியர் விஜயநகர ஆட்சிகாலத்தில் புனரமைக்கப்பட்டது. இவ்வூரில் உள்ள சென்னகேசவபெருமாள் மகாமண்டப மேல்தளத்தில் காணப்படும் முதலாம் ராசராச சோழர்கள் காலத்துண்டு கல்வெட்டுகள் ஐந்தும், சேமக்கோட்டையின் பழம்பெருமையை உணர்த்துகின்றன. திருமூலநாதர் கோவில் கருவறை, இடைக்கட்டு, அர்த்தமண்டபம், மகாமண்டபம், அம்மன் கோவில், கொடிமரம், நந்தியும், வடக்கில் நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் கொண்ட கோவிலும், கிணறும், தென்புறம் பெரியகுளம், சுற்றுமதில் சுவர்களுடன் பெரிய கோவிலாக திகழ்ந்தது.
நிலவளமும், நீர்வளமும், நகர் வளமும் பெருகி மக்களுக்கு சேமம் தரும் ஊராக இவ்வூர் திகழ்ந்ததால் இவ்வூர் சேமநகர் என்று பெயர் பெற்றது. பாண்டியர் ஆட்சிகாலத்தில் போர்படைகள் தங்க வசதியாக கோட்டை அமைக்கப்பட்டு சேமக்கோட்டை என பெயர் பெற்றது. மகாசித்தர் பெருமான் திருமூலர் அவர்களால் வழிபட பெற்றதால் இறைவன் திருமூலநாதர் என பெயர் பெற்றதாகவும், வான்வழியாக வந்த தேர் ஒன்று அழைத்து வந்து திருமூலரை இங்கு இறக்கிவிட்டு மறைந்துவிட்டது என்பன போன்ற செவிவழி புராணகதைகள் பல கூறினாலும், இது முக்கிய நிகழ்வின் பயனாகவும், வெற்றியின் நினைவாகவும் கோவில் எழுப்பபட்டுள்ளது. கி.பி.18 ம் நுாற்றாண்டு வரையிலும் பாண்டியர் அமைத்த இக்கோட்டையும், சோழர்காலத்தில் எழுப்பப்பட்ட இக்கோவில் நல்ல பராமரிப்பில் இருந்தது. இக்கோட்டையில் ஆங்கிலயேர்கள் தங்கியருந்து அதிகாரத்தை செலுத்தியுள்ளதற்கும் ஆதாரமாக கல்வெட்டு காணப்படுகிறது. ஆனால் தற்போது கோட்டை எங்கு இருந்தது என்று தெரியாதபடி அடிச்சுவடே இல்லாமல் மறைந்துவிட்டது. எஞ்சிநிற்கும் வரலாற்று சின்னமாகவும் காணப்படுகிறது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன் கூறினார்.