பதிவு செய்த நாள்
18
டிச
2017
04:12
சபரிமலை: பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு வரும் திருவாபரண பவனியில், மன்னர் பிரதிநிதியை சுமந்து செல்லும் பல்லக்கு புது வடிவத்தில் தயாராகிறது. மகரவிளக்கு நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் திருவாபரணம், பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். பந்தளம் அரண் மனையில் வளர்ந்த ஐயப்பனை காண, அவரது தந்தை ஆபரணங்களுடன் வருவதாக ஐதீகம். ஆண்டுதோறும் ஜன., 12ல் திருவாபரண பவனி பந்தளத்தில் இருந்து புறப்படும். இந்த பவனியில் பந்தளம் மன்னர் பிரநிதி வருவார். அவரை பல்லக்கில் பக்தர்கள் துாக்கி வருவர். இந்த பல்லக்குக்கு தற்போது புதிய வடிவம் கொடுக்கப்படுகிறது. திருவாபரணம், பந்தளம் மன்னர் குடும்பம், அரண்மனை ஆகியவற்றை விளக்கும் படங்கள் பல்லக்கில் வரையப்பட்டுள்ளன. குளநடையை சேர்ந்த ஓவியர் ராஜு இதை வடிவமைத்துள்ளார்.இந்த ஆண்டுக்கான, பந்தளம் மன்னர் பிரதிநிதி அடுத்த வாரம் தேர்வு செய்யப்பட உள்ளார். தேர்வு செய்யப்படுபவர் தினமும், பந்தளம் சாஸ்தா கோயிலில் ஆபரணம் இருக்கும் அரண்மனை முன் அமர்ந்து பக்தர்களுக்கு திருநீறு கொடுத்து ஆசி வழங்குவார்.திருவாபரண பவனி ஜன., 12-ல் புறப்படுகிறது. மகரவிளக்கு முடிந்து அடுத்த நாள் முதல் மாளிகைப்புறம் கோயிலில் நடக்கும் சடங்குகளுக்கும், ஜன.,19- ல் மாளிகைப்புறம் கோயிலில் நடக்கும் குருதிபூஜைக்கும் மன்னர் பிரதிநிதி தலைமை வகிப்பார். ஜன.,20- காலையில் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும். அன்றைய தினம் அவருக்கு மட்டுமே தரிசனம் உண்டு.