திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையுடன் கூடிய மூல நட்சத்திர நாள், அனுமன் அவதரித்த நாளாக கொண்டாடப்படுகிறது. திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று காலை அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. காலை 5 மணி முதல் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வடைமாலை, துளசிமாலை உள்ளிட்ட மாலைகள் சார்த்தப்பட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைணவ செம்மல் வரத சிங்காச்சாரியார், கோவில் பட்டாச்சாரியார் ராகவன் பூஜைகளை செய்து வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.