பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
காரைக்கால்: திருநள்ளாரில் சனிப்பெயர்ச்சி விழா நாளை (19ம் தேதி) நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால், பாதுகாப்பு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா நாளை (19ம் தேதி) நடக்கிறது. அன்று காலை 10:01 மணிக்கு, விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். அதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில், சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அதிகாரிகள் குழு முகாமிட்டு, ஏற்பாடுகளை கவனித்து வருகிறது. கலெக்டர் கேசவன் தலைமையில், பல்வேறு துறை அதிகாரிகள் நேற்று காலை, நளன் குளம், வரிசை வளாகம், வாகனம் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஏற்பாடுகளை பார்வையிட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கட்டுப்பாட்டு அறை: பக்தர்கள் வசதிக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் உதவிக்கு 04368- 237600, 236504 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். மேலும், வடக்கு, தெற்கு உள்ளிட்ட முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 2.50 லட்சம் குடிநீர் பாட்டில்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரசாதம் பைகள், பிஸ்கட், இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிவனை தரிசனம் செய்தப்பின் சனி பகவானை தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நளன் குளம், கோவிலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 200க்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நளன் குளம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
சோப்புக்கு தடை: பக்தர்கள் நளன் குளத்தில் குளிக்கும் போது சோப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தாமல், தண்ணீரை தூய்மை வைத்திருக்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதியிலிருந்து 1,300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சனிப்பெயர்ச்சி அன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளும் மூடப்படுகிறது.
கண்காணிப்பு தீவிரம்: பல்வேறு பகுதியில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கோவில் நிர்வாக அதிகாரி அறையிலிருந்து, போலீசார் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம், திருக்கடையூர், நண்டலாறு வழியாக வரும் வாகனங்கள் நெடுங்காடு மார்க்கத்தில் வருகை தரும் வாகனங்கள், நேரு வேளாண் கல்லூரி வளாகத்தில், நிறுத்தவும், கும்பகோணம்,பேரளம், அம்பகரத்தூர் வழியாக வரும் வாகனங்கள் தென்னங்குடி வி.ஐ.பி.,நகரில் நிறுத்தவும், நாகப்பட்டினம், காரைக்கால் மார்க்கமாக திருநள்ளார் வரும் வாகனங்கள், முருகராம் நகர் நகராட்சி சந்தை திடலில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுதிகள் ஹவுஸ்புல்: சனிப்பெயர்ச்சி விழாவிற்கு, தமிழக பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவர். காரைக்கால், திருநள்ளார் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் உள்ள அறைகள் 2 மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்யப்பட்டு விட்டது. இருக்கும் ஒரு சில விடுதிகளில், வாடகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இருந்தும் அறைகள் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தரங்கம்படி, திருவாரூர் உள்ளிட்ட தமிழக பகுதி விடுதிகளில், பக்தர்கள் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.