பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
சென்னை : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏராளமான பக்தர்கள், பல மணி நேரம், நீண்ட வரிசையில் நின்று தரிசித்தனர்.
அனுமன் ஜெயந்தியான நேற்று, சென்னையில் உள்ள ஆஞ்சநேயருக்கு தனி கோவில்களில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை, நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், அனுமத் ஜெயந்தியான நேற்று, சுவாமிக்கு ஏழு கால பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. மேலும், மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, ஏலக்காய் மாலை சார்த்தப்பட்டது.
நேற்று அதிகாலை முதல், இரவு வரை, லட்சக்கணக்கான பக்தர்கள், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று, ஆஞ்சநேயரை தரிசித்து சென்றனர். இங்கு, டிச., 23ம் தேதி, 36 அடி மூலவருக்கு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்காக, வனத்துறை உதவியுடன், 36 கிலோ சந்தனம் பெறப்பட்டு, கும்பகோணத்தில் அரைக்கப்படுகிறது. டிச., 24ம் தேதி, லட்சார்ச்சனை பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் லட்சுமிகாந்த பாரதிதாசன் செய்துள்ளார். அதே போல், அசோக் நகர், மயிலாப்பூர், கொட்டிவாக்கம் உள்ளிட்ட ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.