பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர்கோவிலில், ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம், வெகு விமரிசையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவை முன்னிட்டு, ஜன., 1ம் தேதி இரவு, ஆருத்ரா அபிஷேகமும், 2ம் தேதி, அதிகாலையில்கோபுர தரிசனமும் நடைபெற்றது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வர சுவாமி கோவில், திருவாலங்காட்டில் உள்ளது. இக்கோவில், சிவபெருமான் நடனமாடிய, ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தினசபை ஆகும். இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் கோபுர தரிசனம், வெகு விமரிசையாக நடந்து வருகிறது.அந்த வகையில், இந்தாண்டிற்கான, ஆருத்ரா அபிஷேகம், நேற்று(ஜன.1ல்) இரவு, 9:00 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு விருட்சமான ஆலமரத்தின் கீழ், 34 வகையான பழங்களால் விடிய, விடிய அபிஷேகம் துவங்கி, ஜன.2ம் தேதி, அதிகாலை, 3:00 மணி வரை நடைபெற்றது.
தொடர்ந்து நடராஜ பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் கோவில் வளாகத்தில் வீதியுலா வந்தார். அதிகாலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் கோவில் முன் வந்து, அருள்பாலித்தார். அப்போது கோபுர தரிசனம் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழகம்ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், இரவு முழுவதும் வந்திருந்து மூலவரை வழிபட்டும், நடராஜ பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் பார்த்து வழிபாடு செய்தனர். பக்தர்கள் ஆருத்ரா அபிஷேகத்தை பார்க்கும் வகையில், மூன்று லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், தற்காலிக தகடுகளால் நிழற்குடை பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும், 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் வளாகம் முழுவதும், வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார், ஜெய்சங்கர், இணை ஆணையர், சிவாஜி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும், மாவட்டஎஸ்.பி., சிபி சக்கரவர்த்தி தலைமையில், 200க்கும் மேற்பட்ட போலீசார், பக்தர்கள் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டுள்ளனர்.