பதிவு செய்த நாள்
04
ஜன
2018
10:01
திருவண்ணாமலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், பக்தர்களுக்கு வினியோகிப்பதற்காக, பாக்கெட் செய்யும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழாவின் போது, 2,668 அடி உயர மலை உச்சியில், ஐந்து அடி உயர கொப்பரையில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆருத்ரா தரிசனம்11 நாட்கள் தொடர்ந்து, எரிந்த மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை பிரசாதம், ஆருத்ரா தரிசனத்தன்று, நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டது.இதையடுத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்வதற்காக, தீப மை பிரசாதம் தயாரிக்கும் பணியில், கோவில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில், மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மையுடன், வேம்பு இலை, தர்ப்பை, மா இலை, அருகம்புல், வில்வ இலை, கரிகாலகட்டை உட்பட பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.இதை அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை செய்த பின், பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த தீப மை பிரசாதத்தை அணிவதால், காரிய சித்தி பலன் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.பத்து கிராம்மஹா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, பத்து கிராம் தீப மை பிரசாதம், விபூதி மற்றும் குங்கும பிரசாதம் அடங்கிய பாக்கெட் சேர்த்து, இலவசமாக வழங்கப்படும். மற்ற பக்தர்கள், பத்து ரூபாய் கட்டணம் செலுத்தி, கோவில் நிர்வாகத்திடம் பெற்று கொள்ளலாம்.தீப மை பிரசாதம் மூலம், ஆண்டுக்கு, 25 லட்சம் - 30 லட்சம் ரூபாய் கோவிலுக்கு வருவாய் கிடைப்பதாக அதிகாரிகள் கூறினர்.