திருப்பரங்குன்றம் கோயிலில் எண்ணெய் காப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜன 2018 10:01
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா நேற்றுமுன்தினம் துவங்கியது. கோயிலில் உற்சவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டபத்தை மூன்றுமுறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டது. அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசி மூலம் பல்துலக்குதல், மைஇட்டு கண்ணாடி பார்த்த நிகழ்ச்சிகள் முடிந்து தீபாராதனை நடந்தது. ஜன., 6 வரை இந்நிகழ்ச்சிகள் நடை பெறும். அன்று பல்லக்கில் தெய்வானை அம்மன் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார். திருவிழா நடைபெறும் 5 நாட்களும் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.