பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
திண்டுக்கல், பழநி தைப்பூச பக்தர்களின் சுகாதாரம் காக்க மாவட்டம் முழுவதும் ஆயிரம் இடங்களில் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூச விழா ஜன.31ல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக வருவார்கள். தைப்பூசம் துவங்கி முடியும் வரை 10 லட்சம் பக்தர்களை பழநி நகரம் சந்திக்கும்.விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடியில் இருந்து பழநி வரும் பக்தர்கள் வாடிப்பட்டியில் சந்திக்கின்றனர்.
தேனி மாவட்ட பக்தர்கள் வத்தலக்குண்டிலும், சிவகங்கை, காரைக்குடி பக்தர்கள்நத்தத்திலும், திருச்சி, தஞ்சாவூர், அரியலுார் ஆகிய இடங்களில் இருந்து வருபவர்கள் வேடசந்துாரிலும், ஈரோடு, பாவானி சேலம் மாவட்டத்தில் இருந்து வருபவர்கள் ஒட்டன்சத்திரத்திலும், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதபுரத்திலும் சந்திக்கின்றனர்.இவ்வாறு வரும் பக்தர்கள் தங்களின் மீதமாகும் உணவுகளை, பாலிதீன் பைகள் போன்றவைகளை அப்படியே போட்டு விட்டு செல்கின்றனர். இதனால் கழிவுகள் சேராமல் இருக்கவும், சுகாதாரம் காக்கவும் மாவட்டம் முழுவதும் ஆயிரம் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கழிவு பொருட்களை குப்பை தொட்டியில் போடுவதற்கு பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் உடனுக்குடன் அகற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் வரும் வழியில் கழிப்பறை, குப்பை தொட்டி உள்ளது என விளம்பரம் பலகை வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.கண்ட இடங்களில் இந்தாண்டு விபத்தை முழுவதுமாக தடுக்க ஒளிரும் ஸ்டிக்கர்கள் பக்தர்களின் கைகளில் மாட்டப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குழுக்களுக்கும் ஒளிரும் குச்சிகளும் வழங்கப்படுகிறது. நடைபாதையில் உள்ள பள்ளங்கள், முட்கள் வெட்டி அகற்றவும் ஏற்பாடு செய்துள்ளனர்.