பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
கோவை:ஜெகநாதர் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு வரும், 6ம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஜெகநாதர் கோவில், 26ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும், 6ம் தேதி மதியம் தேரோட்டம் நடக்க உள்ளது. இதையடுத்து, 6ம் தேதி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் மரக்கடை, என்.எச்., ரோடு, டவுன்ஹால் வழியாக உக்கடத்தை அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக மரக்கடை, என்.எச்., ரோடு வழியாக உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
பொள்ளாச்சி ரோட்டிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளுக்கு செல்லலாம். தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்ல வேண்டும். பேரூர் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை நகருக்குள் நுழைய லாரிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தேரோட்டம் நடக்கும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, ஆர்.ஜி., வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதிகளில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை தேர் வரும் ரோட்டில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.