பதிவு செய்த நாள்
11
ஜன
2018
05:01
கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே பிரசித்தி பெற்ற, பாரியூர் கொண்டத்துகாளியம்மன் கோவில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, டிச.,28ல் பூச்சாட்டுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடந்தது. இதற்காக, நேற்று மாவிளக்கு காப்பு கட்டுதல், பூதவாகன காட்சி நடந்தது. அம்மன் சன்னதிக்கு எதிரே உள்ள, 60 அடி குண்டத்தில் டன் கணக்கில் எரி கரும்பு குவிக்கப்பட்டிருந்து. ஆகமவிதிப்படி நேற்று இரவு, 10:00 மணியளவில் நெருப்பு மூட்டினர். அதன்பின், வீரமக்கள் அடங்கிய குழுவினர், பூமிதிக்க வசதியாக, குண்டத்தை காலை, 6:00 மணிக்கு தயார் செய்தனர். பூமிதிக்கும் பக்தர்கள், வெள்ளாபாளையம் பிரிவில் துவங்கி, திருகினிபாலம், பெருமாள் கோயில் வரை, வரிசையில் நின்றிருந்தனர். பூமிதிக்கு நிகழ்ச்சி துவக்கமாக, காலை, 6:10 மணிக்கு, அம்மன் சிம்ம வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 6:20 மணிக்கு திருக்கொடி தீபம் ஏற்றப்பட்டு, குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின், குண்டத்தில் இருந்த நெருப்பை, இரு கைகளால் அள்ளி வீசி, சரியாக காலை, 6:30 மணிக்கு, பக்திபரவசத்துடன் தலைமை பூசாரி குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, வீரமக்கள், முக்கியஸ்தர்கள், போலீசார் என வரிசையாக குண்டம் இறங்கினர். மொத்தம், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காலை, 10:20 மணி வரை, குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதற்கு முன் கடந்த 2017 ஜன.,12ல் குண்டம் திருவிழா நடந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியால், தடப்பள்ளி வாய்க்காலில் தண்ணீரின்றி, பூமிதிக்கும் பக்தர்கள் நீராட வசதியாக, கோவில் சார்பில் ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சூழ்நிலையிலும், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூமிதித்து சென்றனர். நடப்பு குண்டம் திருவிழாவில், தடப்பள்ளி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் ஓடியும் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால், வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை கனிசமாக குறைந்திருந்தது. கோபியில் இருந்து பாரியூர் கோவிலுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கினாலும், வெளியூர் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.