பதிவு செய்த நாள்
16
ஜன
2018
01:01
செங்குன்றம்: அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டிகளில் பயணித்த விவசாயி மற்றும் சிறுவர்கள், மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான மாட்டுப் பொங்கல், அனைத்து பகுதிகளில் விமரிசையாக நேற்று கொண்டாடப்பட்டது. விவசாயிகளின் நண்பனாக உழைக்கும் மாடுகளை சிறப்பிக்கும் வகையில், மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கல் தினமான நேற்று, சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்ட கிராமங்களான சோழவரம், காரனோடை, ஜனப்பன் சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், நேற்று மாலை, 100க்கும் மேற்பட்ட மாடுகள் அலங்கரிக்கப்பட்டு, வண்டிகளில் பூட்டப்பட்டன. முன்னதாக மாடுகளை குளிப்பாட்டி, அவற்றுக்கு பழம் உள்ளிட்டவற்றை வழங்கிய விவசாயிகள், அவற்றை அலங்கரித்து, கற்பூர ஆராதனை செய்து, பூசணிக்காய், தேங்காய் ஆகியவற்றால் திருஷ்டி கழித்து, மாடுகளை வணங்கினர். இதையடுத்து, சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மாட்டு வண்டிகளில் அமர்ந்து, கிராமங்களை சுற்றி வந்தனர். அப்போது, பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ந்தனர்.