பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திம்மசமுத்திரம் சென்ற, பார் வேட்டை உற்சவம், நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, மேள தாளங்களுடன் சுவாமியை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஏகாம்பரநாதர் கோவிலின் பார் வேட்டை உற்சவம், ஆண்டு தோறும் காணும் பொங்கல் அன்று சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதற்காக நேற்று காலை, 8:30 மணிக்கு கோவிலில் இருந்து ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி மலர் அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருளி, திம்மசமுத்திரம் கிராமத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
இந்த உற்சவச்தை முன்னிட்டு, கோவிலில் இருந்து பல வகையான வாத்தியங்கள், வாண வேடிக்கைகள், மேளதாங்களுடன் ஊர்வலமாக சென்றனர். பகல், 12:00 மணிக்கு சுவாமி, அம்பாள் அக்கிராமத்தை சென்றடைந்தனர். அங்கு கிராமத்து மக்கள் சார்பில் மண்டகப்படி முடிந்த பின், கிராமத்தில் அமைந்துள்ள திரிபுராந்தகேஸ்வரர் கோவில் வளாத்தில் ஏகாம்பரநாதர் எழுந்தருளினார். சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பலவகையான பழங்கள், பால், தேன், தயிர், திருநீர், போன்றவைகளால் மஹா அபிஷேகம் நடைபெற்றது. இந்த உற்சவத்தை முன்னிட்டு, அக்கிராமத்தில், பரதநாட்டியம், நாதஸ்வர கச்சேரி, தேவார பாடல்கள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்கள் வழிபாடு முடிந்து, இரவு ஏகாம்பரநாதர் அங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் கோவிலை சென்றடைந்தார். ஏகாம்பரநாதர் திம்ம சமுத்திரம் செல்லும் வழியில், பக்தர்கள் திரளாக காத்திருந்து, தேங்காய், பழம் உடைத்து வழிபட்டனர். சுவாமி ஊர்வலத்தை முன்னிட்டு திம்மசமுத்திரம் வரை அரக்கோணம் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க வில்லை.