பதிவு செய்த நாள்
22
ஜன
2018
12:01
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் வட மாநில பக்தர்கள் குவிந்ததால், நேற்று சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்ததால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு நேற்று மகராஷ்டிரா, டில்லி, உ.பி., குஜராத் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். இவர்கள்கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்களுடன் தமிழகபக்தர்களும் நீண்ட வரிசையில் நின்றனர்.
சுவாமி, அம்மன் சன்னதியில் தரிசனத்திற்கு ரூபாய் 50 சிறப்பு கட்டண தரிசனம் மற்றும் கட்டணமில்லா தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இக்கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், கோயில் காவலர்கள், ஊழியர்கள் திணறினர். இதன்பின் காலை 7:00 முதல் 10:௦௦ மணிவரை சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்து, அனைத்து பக்தரும் கட்டணமில்லாத தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதித்தது. இதனால்பக்தர்கள் வலது, இடபுற வரிசையில் நின்று மனநிறைவுடன் தரிசனம் செய்து சென்றனர். கூட்ட நெரிசலில் பக்தர்கள் அவதிப்படுவதை தடுக்க தற்காலிகமாக சிறப்பு கட்டண தரிசனத்தை ரத்து செய்தது போல், அதனை நிரந்தரமாக ரத்து செய்ய இந்து அறநிலைதுறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.