பதிவு செய்த நாள்
23
ஜன
2018
01:01
இடைப்பாடி: இடைப்பாடி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பழநி மலைக்கு வரும், 27 முதல் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளனர்.
கடந்த, 358 ஆண்டுகளாக இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த, முருக பக்தர்கள் இடைப்பாடியிலிருந்து பழநிக்கு ஆன்மிக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நாச்சியூர், ஆலச்சம்பாளையம், மேட்டுத்தெரு பகுதியினர், இடைப்பாடி வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள், பருவதராஜகுல மீனவ சமூகத்தினர், சித்தூர், புளியம்பட்டி பகுதி வன்னியர்குல சமூகத்தினர் என ஏழு குழுக்களாக, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் ஆன்மிக பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். இடைப்பாடியிலிருந்து மேட்டுத்தெரு பகுதியினர், ஆலச்சம்பாளையம் பக்தர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும், 27ல் இருந்தும், வெள்ளாண்டிவலசு, கவுண்டம்பட்டி பகுதி வன்னிய சமூகத்தினர், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வரும், 28ல் இருந்தும், பருவதராஜகுல மீனவ சமூகத்தினர், 20 ஆயிரம் பேர் வரும், 29ல் இருந்தும், சித்தூர், ஆடையூர், பக்கநாடு பகுதிகளை சேர்ந்த, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வரும், 30ல் இருந்தும், பழநிக்கு பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். முருக பக்தர்கள் பள்ளி பாளையம், தண்ணீர் பந்தல், வட்டமலை முருகன் கோவில், அமராவதி ஆகிய இடங்களில், உணவு சமைத்து சாப்பிட்டு, பழநிமலைக்கு ஒருவாரம் நடைபயணம் மேற்கொள்ள உள்ளனர். மேட்டுத்தெரு பகுதியினர் பிப்., 2, ஆலச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் பிப்., 3, வெள்ளாண்டிவலசு சமுதாய மக்கள் குழுவை சேர்ந்தவர்கள் பிப்.,4, கவுண்டம்பட்டி, வெள்ளாண்டிவலசு மக்கள் பிப்.,6ல், பழநி மலையில் உள்ள முருகனை தரிசிக்க செல்கின்றனர். பருவதராஜகுல மீனவ சமூகத்தினர் பிப்.,5, பழநி மலையில் உள்ள முருகனை தரிசித்துவிட்டு அன்று இரவு பழநி மலையில் தங்குகின்றனர். வழக்கமாக, பழநி மலையில் முருகனை தரிசிப்பதற்கு, அதிகாலை, 4:00 மணியிலிருந்து இரவு, 9:00 மணி வரை சுவாமி தரிசனமும், மலைக்கு செல்வதற்கான நடைபாதையும் திறந்து இருக்கும். இரவு, 9:00 மணிக்கு மேல் எவரையும் பழநி மலையில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், இடைப்பாடியிலிருந்து செல்லும் பருவத ராஜகுல மீனவ சமூகத்தினருக்கு மட்டும், ஆண்டுதோறும் ஒரு நாள் சிறப்பு அனுமதி அளிக்கப்படுகிறது. இந்தாண்டு பிப்., 5ல், பழநிமலையில் இரவில் தங்க, பருவதராஜகுல பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.