“உங்கள் பாதையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உங்களுக்கே என்கிறார்,” நபிகள் நாயகம். ஒருமுறை, நாயகம் மக்களிடையே பேசும் போது, “உங்கள் ஒவ்வொருவருக்கும் சொர்க்கமும், நரகமும் முன்பே எழுதப்பட்டு விட்டது,”என்றார். உடனே மக்களில் சிலர், “அப்படியானால், நாங்கள் எங்கள் மீது எழுதப்பட்ட விதியை ஒப்புக்கொண்டு அதன்படியே செயல்படலாம் அல்லவா?”என்றனர். அதற்கு நாயகம்,“யார், தனது பொருளை செலவு செய்து இறைவனுக்கு பயந்து நற்செயல்களை செய்கிறாரோ, அவருக்கு சொர்க்கத்துக்கு செல்லும் பாதை காட்டப்படுகிறது. எவன் தன் பொருளை வழங்குவதில் கஞ்சத்தனம் செய்து இறைவனால் சொல்லப்பட்டதை அலட்சியம் செய்கிறானோ, அவனுக்கு நரக வாழ்க்கைக்குரிய பாதை காட்டப்படுகிறது,” என்றார். இறைவன் நமக்கு தந்துள்ளவற்றில் நல்லதையும், கெட்டதையும் தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மைச் சார்ந்தது. கெட்டதை தேர்ந்தெடுத்தால் இவ்வுலகில் தற்காலிக சுகம் கிடைக்கலாம். ஆனால், மறுமை நாளில் நரகத்தில் கிடந்து வேக வேண்டும். எனவே நல்லதை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.