பதிவு செய்த நாள்
10
பிப்
2018
12:02
திருவாலங்காடு: அகத்தீஸ்வரர் கோவில் சுற்றுச்சுவர் உடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் கிராமத்தில், அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், தினமும், ஒரு காலபூஜை நடந்து வருகிறது.இதுதவிர, பவுர்ணமி பிரதோஷம், அஷ்ட பைரவர் பூஜை மற்றும் மகா சிவராத்திரி போன்ற முக்கிய விழாக்கள் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. மேலும், ஆண்டுதோறும் நடக்கும் ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனத்தில், இரவு நேரம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிப்பர்.சிறப்பு வாய்ந்த இந்த கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டி பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்தாண்டு கோவிலின் சுற்றுச்சுவர், ஒன்றரை மீட்டர் துாரம் உடைந்தது.
இதை சீரமைக்காமல், கோவில் நிர்வாகத்தினர் மெத்தனம் காட்டி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன், சுற்றுச்சுவர் சீரமைப்பதற்கு இருபுறமும் பில்லர் போடப்பட்டன. அதோடு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளன. கோவிலுக்கு சுற்றுச்சுவர் பாதுகாப்பு இல்லாததால், திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால், சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.