பதிவு செய்த நாள்
10
பிப்
2018
12:02
திருத்தணி: ஊராட்சியில் உள்ள அம்பாளீஸ்வரர் கோவில், போதிய பராமரிப்பின்றியும், சுற்றுச்சுவர் இல்லாமலும் உள்ளதால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி கிராமத்தில் உள்ளது, அம்பாளீஸ்வரர் கோவில். இதன் அருகில், கோவில் குளமும் உள்ளது. இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், தினசரி, ஒரு கால பூஜை நடந்து வருகிறது.
மஹா சிவராத்திரி மற்றும் மாதந்தோறும் வரும், பிரதோஷம், பவுர்ணமி போன்ற முக்கிய நாட்களில், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. அப்போது, நெமிலி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமியை வழிபட்டு செல்கின்றனர்.இந்த நிலையில், போதிய பராமரிப்பு இல்லாததால், கோவில் கோபுரம் மற்றும் கட்டடத்தின் மீது செடிகள் வளர்ந்துள்ளன. கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சிலர் அங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தவிர கோவில் குளத்தையும் இந்து அறநிலைய துறையினர் முறையாக பராமரிக்கவில்லை.இனியாவது, கோவிலை சுற்றியும் சுவர் எழுப்பி, குளத்தையும் முறையாக பராமரிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.