பதிவு செய்த நாள்
10
பிப்
2018
12:02
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பத்ரகாளியம்மன் கோயில் முன் பெருகி வரும் ஆக்கிரமிப்பால் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரம் தோறும் வெள்ளி, செவ்வாய், ஞாயிறு கிழமைகளில் பெண் பக்தர்களின் கூட்டம் அதிகம் காணப்படும், கேட்ட வரம் தருபவள், செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுவது உண்டு. கோயிலுக்கு முன் தேங்காய், பழம், சூடம், கூல்டிரிங்ஸ், எலுமிச்சை மாலை விற்பனை செய்யும் 30க்கும் மேற்பட்ட கடைகள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பாதையில் நடந்து கூட செல்ல முடியவில்லை. கோயில் முன் ரோட்டை ஆக்கிரமித்து பூஜை பொருட்களை விற்பனை செய்வதால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர்.
ரோட்டை ஒட்டி 50க்கும் மேற்பட்டோர் சாலையை ஆக்ரமித்துள்ளதால் பஸ், வேன், ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாவதுடன் விபத்துகளும் நேரிட்டு வருகின்றன. வாகன ஓட்டிகள் அச்சத்துடன் இப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டி உள்ளது. பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் ரோட்டோரம் நிறுத்தி விட்டு நடந்து செல்லவேண்டி உள்ளது. கோயிலுக்கு முன் அரசு பொது இடத்தை ஆக்கிரமித்து கடையை அமைத்து வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்லும் இக்கோயிலில் அடிப்படை வசதி எதுவும் இல்லை. பெண் பக்தர்களுக்கு சரியான கழிப்பிட வசதியில்லாததால் வைகை ஆற்றினுள் மறைவில் செல்ல வேண்டியுள்ளது. சமூக விரோதிகள் அப்பகுதியில் பதுங்கியிருந்து பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் கோயில் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.