பதிவு செய்த நாள்
14
பிப்
2018
01:02
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின்போது, பக்தர்கள் தங்கி விரதம் மேற்கொள்ள, புதிய மண்டபம் அமைக்கப்படுமா என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர். கோயிலில் சஷ்டி திருவிழாவின் போது திருப்பரங்குன்றம், மதுரை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் காப்புக்கட்டி கோயில் மண்டபங்கள், வள்ளி, தேவசேனா மண்டபங்கள், கோயில் திறந்த வெளி வளாகங்களில் ஆறு நாட்கள் தங்கி விரதம் மேற்கொள்வர்.
புதிய சஷ்டி மண்டப அறிவிப்பு: திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., பொறுப்பாளராக பணியாற்றிய அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க., வின் வெற்றிக்காகவும், உடல் நல குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் இருந்த முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் வேண்டி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்த வந்தார். அப்போது கோயில் மண்டபங்களில் சஷ்டி பக்தர்கள் தங்கி இருப்பதையும், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்தும் கோயில் நிர்வாகிகள், சிவாச்சார்யார்களிடம் கேட்டார். அவர்களின் விளக்கத்தில் திருப்தி அடையாத பன்னீர் செல்வம், இந்த அடிப்படை வசதிகள் போதாது, மேலும் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் கோயில் மண்டபங்களில் தங்கி இருப்பதால் தினம் கோயிலுக்குவரும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும். எனவே சஷ்டி பக்தர்கள் தங்க அனைத்து வசதிகளுடன், அரசு சார்பில் புதிய மண்டபம் கட்ட நடவடிக்கை
எடுக்கப்படும், என கூறினார்.
இதற்காக சரவணப் பொய்கை செல்லும் வழியிலுள்ள இடம், கிரிவல பாதையில் மலைக்குமேல் செல்லும் பதிய படிக்கட்டு எதிரிலுள்ள கோயில் இடங்களை பார்வையிட்டார். ஏதாவது ஒரு இடத்தில் ஐந்து மாடிகளைக் கொண்ட புதிய சஷ்டி மண்டபம் கட்டவும், அதில் சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் தங்குவதற்கும், அடிப்படை வசதிகள் செய்யவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவரது அறிவிப்பிற்குப்பின்பு சஷ்டி மண்டபம் கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகள்கூட தொடங்கியதாக இல்லை. இந்த ஆண்டு சஷ்டி திருவிழாவிற்குள் அப்பணிகள் முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதற்கு போஸ் எம்.எல்,ஏ., மற்றும் மாவட்டத்திலுள்ள இரண்டு அமைச்சர்களும் முயற்சிக்க வேண்டும்.