பதிவு செய்த நாள்
15
பிப்
2018
01:02
தர்மபுரி: தர்மபுரியில் இன்று, நடக்கவுள்ள மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு கடந்த, 13 காலை கணபதி ?ஹாமம், லட்சுமி ?ஹாமம், நவக்கிரக ?ஹாமம் மற்றும் காயத்திரி ?ஹாமம் நடந்தது. நேற்று மதியம், 1:00 மணிக்கு, பக்தர்கள் பால்குடம் எடுத்தலும், இரவு, 9:30 மணிக்கு பரமேஸ்வரிக்கும், தாண்டேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
இன்று அதிகாலை, 4:00 மணிக்கு, முகவெட்டு ஆரத்தி, காலை, 11:00 மணிக்கு அம்மன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு மேல், அங்காளம்மன் மயானத்தில் இருந்து புறப்பட்டு, அம்மன் திருவீதி உலா நடக்கிறது. நாளை மாலை, 6:00 மணிக்கு மேல், பிள்ளைபாவு நிகழ்ச்சி, நாளை மறுநாள், காலை, 10:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதேபோல், தர்மபுரி குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவில், எஸ்.வி.,ரோடு அங்காளம்மன் கோவில் மற்றும் வெளிப்பேட்டைதெரு அங்காளம்மன் கோவில்களில், மயானக்கொள்ளையை முன்னிட்டு, நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.