பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள், குளங்கள், கடை வளாகங்கள் உள்ளிட்டவற்றை அறநிலையத்துறை, வருவாய் ,நகராட்சி, மற்றும் போலீசாருடன் இணைந்து தமிழக திருத்தொண்டர் சபையினர் ஆய்வு செய்தனர்.இதன் பின் தமிழக திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் கோயில் சொத்துக்களை முறையாக பராமரித்தாலே வருமானம் வரும். தற்போது கோயில்கள் சமூக விரோதிகள் பணம் ஈட்டும் இடமாக மாறி வருகிறது. தரிசனத்தின்போது ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் சமஉரிமை, சமநிலை இருக்கவேண்டும். தமிழக கோயில்களில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி , கோயில் சொத்துக்களை கையகப்படுத்த கோரி அரசிற்கு மனு கொடுப்போம். மாநில அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம், என்றார்.