பதிவு செய்த நாள்
29
டிச
2011
11:12
மாஸ்கோ: பகவத் கீதைக்கு தடை விதிக்க முடியாது என, ரஷ்ய கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஷ்யாவில், ஆர்த்தோடாக்ஸ் சர்ச் ஒன்று, பகவத் கீதைக்கு, "இஸ்கான் நிறுவனர் பக்தி வேதாந்த பிரபுபாதா எழுதிய உரையான "பகவத் கீதை - உள்ளது உள்ளபடி என்ற பிரசுரம், பயங்கரவாதத்தைத் தூண்டுவதாக இருப்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், ரஷ்யாவில் தடை விதிக்கப்பட்டுள்ள, ஹிட்லரின் மெயின் கேம்ப், ஜெகோவா சாட்சியங்கள் உள்ளிட்ட ஆயிரத்து 57 புத்தகங்களுடன், பகவத் கீதையையும் சேர்க்க வேண்டும் எனவும் கோரி, டோம்ஸ்க் நகர் கோர்ட்டில் ஒரு மனுவை, கடந்த ஆறு மாதங்கள் முன்பு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான பலகட்ட விசாரணைகள் முடிந்து, கடந்த 19ம் தேதி தீர்ப்பளிப்பதாக இருந்தது. ஆனால் அப்போது, பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்ததாலும், மேலும் சில விசாரணைகள் நடத்த வேண்டியிருந்ததாலும், டோம்ஸ்க் கோர்ட், தீர்ப்பை 28ம் தேதிக்கு (நேற்று) ஒத்தி வைத்தது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் டில்லியில் உள்ள ரஷ்ய தூதரை அழைத்துப் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்பிரச்னையைத் தீர்க்க இயன்றவரை ரஷ்யா ஒத்துழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
திட்டமிட்டபடி நேற்று, இறுதிக் கட்ட விசாரணை நடந்தது. விசாரணை முடிவில், பிரபுபாதாவின் பகவத் கீதை உரைக்குத் தடை விதிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.
நீதிபதி கலினா புடென்கோ தனது தீர்ப்பில், பிரபுபாதாவின் பகவத் கீதை பயங்கரவாதத்தைத் தூண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை எனத் தெரிவித்தார். இத்தீர்ப்பை, ரஷ்ய இந்து கவுன்சில் தலைவர் சாது பிரியதாஸ் வரவேற்றுள்ளார். உலகம் முழுவதிலும் உள்ள "இஸ்கான் அமைப்பினரும், இந்துக்களும் இத்தீர்ப்பை ஒருமனதாக வரவேற்றுள்ளனர். தீர்ப்பு குறித்து, பார்லிமென்டில் நேற்று பேசிய அமைச்சர் கிருஷ்ணா,"பகவத் கீதை மீதான மனு, அறியாமையால், தவறான வழிநடத்தலால் அல்லது தனிப்பட்ட முறையில் தூண்டப்பட்ட சிலரால் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு அபத்தமானதும் கூட என்றார்.
இந்த வழக்கு குறித்து கடந்த வாரம் அறிக்கை வெளியிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்,"இந்த மனு பகவத் கீதைக்கு எதிரானதல்ல. ஆனால், பக்தி வேதாந்த பிரபு பாதாவின் உரையை எதிர்த்து தான் மனு தாக்கலாகியுள்ளது. அதேநேரம், இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் உள்ள பகவத் கீதை, தொன்மையான இந்து மத இலக்கியங்களில் மிகப் புகழ் பெற்றது என்பதை, யாராலும் மறுக்க முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் பக்தி வேதாந்த பிரபு பாதாவின் பகவத் கீதை உரையின் ரஷ்ய மொழிபெயர்ப்பு தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருந்ததால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.