பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
தஞ்சாவூர்: மாசிமக திருவிழாவை ஒட்டி, கும்பகோணம் மகாமக குளத்தில், நேற்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர். மாசிமக விழாவான நேற்று காலை, கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் உட்பட, 12 சிவாலயங்களில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் புறப்பாடாகி, ரிஷப வாகனங்களில், மகாமக குளக்கரையில் எழுந்தருளினர். தொடர்ந்து, அந்தந்த கோவிலின் அஸ்திர தேவர்களுக்கு, 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடந்த போது, பொதுமக்களை குளத்துக்குள் விடமால், போலீசார் கேட்டுகளை பூட்டினர்.
வாக்குவாதம் : தீர்த்த வாரிக்காக, நாகேஸ்வரர் கோவில் பஞ்சமூர்த்திகளை, குளத்தின் வடகரையில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் வைப்பதற்காக, பணியாளர்கள் எடுத்து வந்தனர். காசி விஸ்வநாதர் கோவில் பஞ்சமூர்த்திகளை மட்டும் தான், தீர்த்தவாரி மண்டபத்தில் வைப்பது வழக்கம். நாகேஸ்வர சுவாமியை, காசிவிஸ்வநாதர் கோவில் நிர்வாகத்தினர் அனுமதிக்காததால், நாகேஸ்வரர் சுவாமியை வீதியிலேயே நிறுத்தி, இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அறநிலைய அதிகாரிகள், போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். ஆனாலும், நாகேஸ்வரர் சுவாமியை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்ததால், வேறு வழியின்றி அனுமதித்தனர். இதனால், 30 நிமிடங்கள் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி : புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில், மாசிமக தீர்த்தவாரி நேற்று நடந்தது. செஞ்சி அரங்கநாதர், மயிலம் சுப்ரமணியர், மேல்மலையனுார் அங்காளம்மன், மணக்குள விநாயகர் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட சுவாமிகள், மேள, தாளத்துடன் ஊர்வலமாக வந்து, வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளி, புனித நீராடினர். தீர்த்தாரி முடிந்து, கடற்கரையில் வரிசையாக, பக்தர்கள் தரிசனத்திற்காக, சுவாமிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாசி மகத்தையொட்டி, கடற்கரையில் ஏராளமானோர், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.