பதிவு செய்த நாள்
02
மார்
2018
02:03
கிருஷ்ணகிரி: பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி கோவிந்தராஜூலு சுவாமி கோவிலில், நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் சின்னமட்டாரப்பள்ளி ராஜூமலையில் உள்ள கோவிந்தராஜூலு சுவாமி கோவில், 44ஆம் ஆண்டு திருக்கல்யாண பிரமோற்சவம், கடந்த மாதம், 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 27ல் கருட வாகன உற்சவமும், 28ல் சேஷ வாகன உற்சவமும் நடந்தது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு, காலை, 11:00 மணிக்கு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மேள தாளம் முழங்க சீர்வரிசைகளுடன் கோவிலுக்கு ஊர்வலாக சென்றனர்.
பின் கோவில் வளாகத்தில் சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், மாப்பிளை வீட்டாராக வெங்கடபதி நாயுடு குடும்பத்தினரும், பெண் வீட்டாராக நாராயணன் - பத்மாவதி குடும்பத்தினரும் செயல்பட்டு, திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாணம் முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜூலு சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு, 7:00 மணிக்கு, யானை வாகன உற்சவமும், நாளை இரவு, 12:00 மணிக்கு வாண வேடிக்கையும் நடக்க உள்ளது. 4 காலை, 9:00 மணிக்கு, வசந்த உற்சவமும், அன்னதானமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஊர்பொதுமக்கள் மற்றும் கங்கானதாரர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.