பதிவு செய்த நாள்
27
மார்
2018
03:03
அரூர்: அரூர் அடுத்த, தீர்த்தமலை மலைக்கோவிலுக்கு செல்லும் பாதையை, சீரமைக்க வேண்டும், என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, ராமர், குமாரர் உள்ளிட்ட தீர்த்தங்களில், புனித நீராடுவதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், வந்து செல்கின்றனர். தீர்த்தமலை அடிவாரத்தில் இருந்து, மலைக்கோவிலுக்கு செல்லும் பாதை குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக, முதியவர்கள் மலை ஏறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல், நீராடி விட்டு, வரும் பெண்களுக்கு, உடை மாற்ற, அறைகள் இல்லாததால், அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேதமடைந்துள்ள பாதையை சீரமைப்பதுடன், பெண்கள் உடை மாற்றுவதற்கு, வசதி செய்து தர வேண்டும். மலை அடிவாரத்தில், பூட்டிக் கிடக்கும் கழிப்பறையை, பயன்பாட்டிற்கு கொண்டு, வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.