பதிவு செய்த நாள்
16
ஏப்
2018
03:04
கோவை: கோவையில் நேற்று 108 நாட்டு பசு மாடுகளுக்கு கோமாதா பூஜை நடந்தது. குனியமுத்துார் மாச்சம்பாளையம் அருகே, ’கோ சேவா சமிதி’ சார்பில், 108 நாட்டு பசுக்களுக்கான மகா கோமாதா பூஜை நேற்று மாலை, சமிதியின் மாநில தலைவர் உதயகுமார் தலைமையில் நடந்தது. துவக்கமாக, விநாயகர் பூஜை மற்றும் மக்களின் நலனுக்கான மகா யாகம் நடந்தது. தொடர்ந்து, சாது சன்னியாசிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் சபை கூட்டம் நடந்தது. பேரூராதினம் இளையபட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதினம் கவுமார மடாலய குமரகுருபர சுவாமிகள், காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் உள்ளிட்டோர் பேசினர். கன்னியாகுமரி வெள்ளிமலை ஆசிரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாலை, வேட்டி அணிவிக்கப்பட்டு, கன்றுடன் காத்திருந்த நாட்டு பசுக்களுக்கு, தாமரை, அரளி, சம்பங்கி மலர்கள் மற்றும் அரிசியால் மக்கள் குடும்பத்துடன் பூஜை செய்து, வழிபட்டனர். இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, மண் வளம் அதிகரிப்பு, கிராம மக்களின் பொருளாதார மேம்பாடு, மக்களின் ஆரோக்கியம் மற்றும் வாழ்வு செழிப்பதற்காக நடந்த இப்பூஜையில், 7,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.