பதிவு செய்த நாள்
21
ஏப்
2018
12:04
எண்ணுார் : எண்ணுார், பர்மா நகரில், அங்காள ஈஸ்வரி கோவிலில், பிரம்மாண்ட அங்காள ஈஸ்வரி மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளுக்கு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பர்மாவில் இருந்து, தாயகம் திரும்பிய தமிழர்கள், 1964ம் ஆண்டு, எண்ணுார், பர்மா நகரில் குடியேறினர்.பின், பர்மாவில் உள்ள, அங்காள ஈஸ்வரி கோவிலில் இருந்து, மண் எடுத்து வரப்பட்டு, அங்கிருப்பது போல், ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரன் - அங்காள ஈஸ்வரி கோவிலை, இங்கே கட்டினர்.கடந்த, 2011ல், கோவிலுக்கு, 72 அடி உயர, ராஜகோபுரம் கட்டப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களின் நன்கொடையான, 1.36 கோடி ரூபாய் செலவில், கோவில் வளாகத்தில், 43 அடி உயர ஆஞ்சநேயர் சிலை; 45 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலை ஆகியவை, திருக்கடையூர் ஸ்தபதிகளால்,பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலை வடிவமைப்பு பணி நிறைவடைந்ததையொட்டி, பிரம்மாண்ட சிலைகளுக்கு நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.நேற்று முன்தினம் காலை, கணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமமும்; மாலையில், நவக்கிரஹ ஹோமம், மூலமந்திர மஹா ஆஞ்ச நேயர் ஹோமம் நடைபெற்றன.நேற்று காலை, யாகசாலைகள் நிர்மானிக்கப்பட்டு, கலச பூஜைகள் நடைபெற்றன. காலை, 10:00 மணிக்கு, புனித நீர் ஊற்றப்பட்டு, ஜீரணோதாரண மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஜெய் ஆஞ்சநேயா... ஓம் சக்தி, பராசக்தி என, விண்ணதிர முழங்கினர்.தொடர்ந்து, நேற்று மாலை, கொடியேற்றம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றன. தீமிதிதிருவிழா, 29ம் தேதி நடைபெறும்.