பதிவு செய்த நாள்
23
ஏப்
2018
12:04
மீஞ்சூர்: மீஞ்சூர் அருகே, பழமை வாய்ந்த,அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை பகுதியில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரம், மண்டபம், மூலவர் காட்சி விமானம், வரசித்தி விநாயகர் சன்னதி விமானம், கோவில் சுற்று பிரகாரம் ஆகியவை புனரமைக்கப்பட்டன. கோவில் புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், நேற்று மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. அம்மனுக்கு யாகசாலைகள் அமைக்கப்பட்டன. பரிவார சன்னதிகளுக்கும் தனி யாகசாலைகள் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை, 8:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். இதை தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதில் சென்னை, மீஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வணங்கினர்.