புதுச்சேரி: திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவிலில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நேற்று சுவாமி தரிசனம் செய்தார். திருக்கனுார் அடுத்த திருவக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த சந்திரமவுலீஸ்வரர், வக்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், பவுர்ணமி, அமாவாசை தினங்கள் ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. அமாவாசை தினத்தை முன்னிட்டு வக்ர காளியம்மன் கோவிலில், நேற்று மதியம் 12:00 மணி அளவில் ஜோதி தரிசனம் நடந்தது. முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இந்நிலையில், திண்டிவனம் வழியாக மேல்மலையனுார் சென்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி இந்திரா பானர்ஜி, திருவக்கரை கோவிலுக்கு மாலை 6:10 மணிக்கு வந்தார். வக்ரகாளியம்மன், சந்திரமவுலீஸ்வரரை சுவாமி தரிசனம் செய்து விட்டு, இரவு 7:30 மணிக்கு புறப்பட்டு சென்றார். கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி மற்றும் கோவில் நிர்வாகிகள் உடனிருந்தனர்.