‘ஸ்வேதகீ’ என்ற அரசன் பன்னிரெண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த யாகத் தீயில் இட்ட நெய்யை அக்னி பகவான் உண்டதால், அவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. உடனே பிரம்ம தேவனிடம் சென்று தீர்வு கேட்டபொழுது, ‘காண்டவ வனத்தில் வளர்ந்திருக்கிற மூலிகைகளே இதற்கு மருந்தாகும்’ என்றார். உடனே, அக்னி பகவான் காண்டவ வனத்தை நெருங்கினார். காடுகள் அழிந்துபோனால் நாட்டில் மழை பொழிவு ஏற்படாது என்று எண்ணிய இந்திரன், அக்னி பகவான் காட்டை விழுங்க நெருங்கிய சமயம். அடை மழையைப் பொழியச் செய்தார். இதனால் அக்னி தேவன் தமது செயலில் தோற்றுப்போனார். அடுத்த கணமே வயோதிக வடிவம் எடுத்து யமுனை நதிக்கரை ஓரமாக நடந்து போய்க்கொண்டிருந்தார். அவர் எதிரில் கிருஷ்ண பரமாத்மாவும் அர்ஜுனனும் வந்தனர். அவர்களிடம் அக்னி பகவான் தனது பிரச்னையை சொன்னார். அதற்கு கிருஷ்ணர், ‘எப்படிப்பட்ட அடைமழை வந்தாலும் நான் கவனித்துக் கொள்கிறேன். உனக்குத் தேவையான உணவை இப்போது தொடங்கி, 21 நாட்களுக்குள் எடுத்துக் கொள்’ என்றார். உடனே அர்ஜுனன், தன் அம்புகளால் காட்டைச் சுற்றிலும் பரண் அமைத்து அக்னியின் ‘மேல் ஒரு துளி மழைநீர் கூட படாமல் காத்து வந்தார்.
அக்னி பகவான் முதல் ஏழு நாட்களில் பூமியின் கீழ் பகுதி மூலிகைகளை உண்டார். அந்த நேரத்தில் வெப்பம் மெதுவாகப் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு நாட்களில் மிகப் பெரியதாக வளர்ந்திருந்த அடர் காட்டை உண்டார். அப்போது வெப்பம் மிகக் கொடுமையைக் காட்டியது. இறுதி ஏழு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. முழுவதும் தணிந்து இளவெயில் பூமி எங்கும் பரவியது. இவ்வாறு அக்னி பகவான் காண்டவ வனத்தை முழுவதுமாக அழித்து விழுங்கிய அந்த 21 நாட்களே அக்னி நட்சத்திர நாட்களாகச் சொல்லப்படுகின்றன. கத்திரி வெயில் காலமான 21 தினங்களில் முதல் ஏழு நாட்கள் ஏறுமுகமாகக் காணப்படும். அடுத்த ஏழு நாட்கள் அதிகமாகத் தெரியும். கடைசி ஏழு தினங்களில் படிப்படியாகக் குறைந்து வரும். கோடைக் காலத்தின் உச்சகட்டமான காலம்தான் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில்.