Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2. தமிழ் நாடு 2. தமிழ் நாடு
முதல் பக்கம் » தேசீய கீதங்கள்
1. பாரத நாடு
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
12:01

1. வந்தே மாதரம்

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி)

பல்லவி

வந்தே மாதரம் என்போம்-எங்கள்
மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)

சரணங்கள்
1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே- அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ?-பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)

3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்
சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)

4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)

5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்
முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)

6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)

2. ஜய வந்தே மாதரம்

ராகம்-ஹிந்துஸ்தானி பியாக்தாளம்-ஆதி

பல்லவி
வந்தே- மாதரம்- ஜய
வந்தே மாதரம் (வந்தே)

சரணங்கள்
1. ஜயஜய பாரத ஜயஜய பாரத
ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய (வந்தே)

2. ஆரிய பூமியில் நாரிய ரும் நர
சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் (வந்தே)

3. நொந்தே போயினும் வெந்தே மாயினும்
நந்தே சத்தர்உ வந்தே சொல்வது (வந்தே)

4. ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர்
சென்றா யினும்வலி குன்றா தோதுவம் (வந்தே)

3. நாட்டு வணக்கம்

ராகம்--காம்போதி தாளம்-ஆதி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே-அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே-அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே-இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி, என்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?  1

இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து, அருள்
ஈந்ததும் இந்நாடே- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே- அவர்
கன்னிய ராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி, இல்
போந்ததும் இந்நாடே-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?  2

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே-அவர்
தங்க மதலைகள் ஈன்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே-மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே-பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே-இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ? 3

4. பாரத நாடு

ராகம்-ஹிந்துஸ்தானி தோடி

பல்லவி
பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள்
பாரத நாடு

சரணங்கள்
1. ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

2. தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப் (பாருக்குள்ளே)

3. நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

4. ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக் (பாருக்குள்ளே)

5. வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

6. யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

7. ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

8. தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)

5.பாரத தேசம்

ராகம்--புன்னாகவராளி

பல்லவி
பாரத தேசமென்று பெயர் சொல்லு வார்-மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லுவார்

சரணங்கள்
1. வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம்;அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம்;எங்கள்
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம். (பாரத)

2. சிங்களத் தீவினுக்கோர் பாலம்அமைப் போம்;
சேதுவை மேடுறுத்தி வீதிசமைப் போம்;
வங்கத்தில் ஓடிவரும் நீரின்மிகை யால்
மையத்து நாடுகளில் பயிர்செய்கு வோம். (பாரத)

3. வெட்டுக் கனிகள்செய்து தங்கம்முத லாம்
வேறு பலபொருளும் குடைந்தெடுப் போம்;
எட்டுத் திசைகளிலுஞ் சென்றிவைவிற் றே
எண்ணும் பொருளனைத்தும் கொண்டுவரு வோம். (பாரத)

4. முத்துக் குளிப்பதொரு தென்கடலி லே
மொய்த்து வணிகர்பல நாட்டினர்வந் தே,
நத்தி நமக்கினிய பொருள்கொணர்ந்து
நம்மருள் வேண்டுவது மேற்கரையி லே (பாரத)

5. சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேரநன் னாட்டிளம் பெண்களுட னே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத் துத்
தோணிக ளோட்டிவிளை யாடிவரு வோம் (பாரத)

6. கங்கை நதிப்புறத்துக் கோதுமைப்பண் டம்
காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்ளு வோம்;
சிங்க மராட்டியர்தம் கவிதைகொண் டு
சேரத்துத் தந்தங்கள் பரிசளிப் போம் (பாரத)

7. காசி நகர்ப்புலவர் பேசும்உரை தான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவிசெய் வோம்;
ராசபுத் தானத்து வீரர்தமக் கு
நல்லியற் கன்னடத்துத் தங்கம் அளிப் போம் (பாரத)

8. பட்டினில்ஆடையும் பஞ்சில் உடை யும்
பண்ணி மலைகளென வீ திகுவிப் போம்;
கட்டித் திரவியங்கள் கொண்டு வரு வார்
காசினி வணிகருக்கு அவைகொடுப் போம். (பாரத)

9. ஆயுதம் செய் வோம்நல்ல காகிதம்சேய் வோம்;
ஆலைகள்வைப் போம் கல்விச் சாலைகள்வைப் போம்;
ஓயுதல்செய் யோம்தலை சாயுதல்செய் யோம்;
உண்மைகள் சொல் வோம்பல வண்மைகள் செய்வோம். (பாரத)

10. குடைகள் செய் வோம்உழு படைகள்செய் வோம்,
கோணிகள் செய் வோம்இரும் பாணிகள் செய் வோம்;
நடையும் பறப்புமுணர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள்செய் வோம். (பாரத)

11. மந்திரம்கற் போம்வினைத் தந்திரம்கற் போம்;
வானையளப் போம் கடல் மீனையளப் போம்;
சந்திரமண் டலத்தியல் கண்டு தெளி வோம்;
சந்தி தெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம். (பாரத)

12. காவியம்செய் வோம், நல்ல காடுவளர்ப் போம்;
கலைவளர்ப் போம் கொல்ல ருலைவளர்ப் போம்;
ஓவியம்செய் வோம் நல்ல ஊசிகள்செய் வோம்;
உலகத்தொழிலனைத்து முவந்துசெய் வோம். (பாரத)

13. சாதி இரண்டொழிய வேறில்லையென் றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்தமென் போம்;
நீதிநெறி யினின்று பிறர்க்குத வும்
நேர்மையர் மேலவர்; கீழவர்மற் றோர். (பாரத)

6. எங்கள் நாடு

ராகம்-பூபாளம்

மன்னும் இமய மலையெங்கள் மலையே
மாநில மீதது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே
பார்மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே  1

மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர்பலர் வாழ்ந்தபொன் னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொலிந்தநன் னாடு
புத்தர் பிரானருள் பொங்கிய நாடு
பாரத நாடு பழம்பெரு நாடே
பாடுவம் இஃதை எமக்கிலை நாடே  2

இன்னல்வந் துற்றிடும் போததற் கஞ்சோம்
ஏழைய ராகி இனிமண்ணில் துஞ்சோம்
தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்
தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்
கன்னலும் தேனும் கனியும்இன் பாலும்
கதலியும் செந்நெலும் நல்கும்எக் காலும்
உன்னத ஆரிய நாடெங்கள் நாடே
ஒதுவம் இஃதை எமக்கிலை ஈடே  3

7.ஜய பாரத!

1. சிறந்து நின்ளற சிந்தை யோடு
தேயம் நூறு வென் றிவள்
மறந்த விர்ந்தந் நாடர் வந்து
வாழி சொன்ன போழ்தினும்
இறந்து மாண்பு தீர மிக்க
ஏழ்மை கொண்ட போழ்தினும்
அறந்த விர்க்கி லாது நிற்கும்
அன்னை வெற்றி கொள்கவே!

2. நூறு கோடி நூல்கள் செய்து
நூறு தேய வாணர்கள்
தேறும் உண்மை கொள்ள இங்கு
தேடி வந்த நாளினும்
மாறு கொண்டு கல்வி தேய
வண்மை தீர்ந்த நாளினும்
ஈறு நிற்கும் உண்மை யொன்று
இறைஞ்சி நிற்பள் வாழ்கவே!

3. வில்லர் வாழ்வு குன்றி ஓய
வீர வாளும் மாயவே
வெல்லு ஞானம் விஞ்சி யோர்செய்
மெய்மை நூல்கள் தேயவும்
சொல்லும் இவ் வனைத்தும் வேறு
சூழ நன்மை யுந்தர
வல்ல நூல்கெ டாது காப்பள்
வாழி அன்னை வாழியே!

4. தேவ ருண்ணும் நன்ம ருந்து
சேர்ந்த கும்பம் என்னவும்
மேவு வார்க டற்க ணுள்ள
வெள்ள நீரை ஒப்பவும்
பாவ நெஞ்சி னோர் நிதம்
பறித்தல் செய்வ ராயினும்
ஓவி லாத செல்வம் இன்னும்
ஓங்கும் அன்னை வாழ்கவே!

5. இதந்த ரும்தொ ழில்கள் செய்து
இரும்பு விக்கு நல்கினள்
பதந்த ரற் குரிய வாய
பன்ம தங்கள் நாட்டினள்
விதம்பெ றும்பல் நாட்டி னர்க்கு
வேறொ ருண்மை தோற் றவே
சுதந்தி ரத்தி லாசை இன்று
தோற்றி னாள்மன் வாழ்கவே!

8. பாரத மாதா

தான தனந்தன தான தனந்தன
தானனத் தானா னே.

முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடை வில்?-எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய ராணியின் வில்   1

இந்திர சித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடை வில்?-எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்.   2

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகின்பக் கேணி என்றே-மிக
நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன்திருக் கை.   3

சித்த மயமிவ் வுலகம் உறுதிநம்
சித்தத்தில் ஓங்கிவிட் டால்-துன்பம்
அத்தனை யும்வெல்ல லாமென்று சொன்னசொல்
ஆரிய ராணியின் சொல்   4

சகுந்தலை பெற்றதோர் பிள்ளைசிங் கத்தினைத்
தட்டி விளை யாடி-நன்று
உகந்ததோர் பிள்ளைமுன் பாரத ராணி
ஒளியுறப் பெற்ற பிள்ளை.   5

காண்டிவம் ஏந்தி உலகினை வென்றது
கல்லொத்த தோள்எவர் தோள்?-எம்மை
ஆண்டருள் செய்பவள் பெற்று வளர்ப்பவள்
ஆரிய தேவியின் தோள்.   6

சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர்கொடைக் கை?-சுவைப்
பாகு மொழியிற் புலவர்கள் போற்றிடும்
பாரத ராணியின் கை.   7

போர்க்களத் தேபர ஞானமெய்க் கீதை
புகன்ற தெவருடை வாய்?-பகை
தீர்க்கத் திறந்தரு பேரினள் பாரத
தேவி மலர்த்திரு வாய்.   8

தந்தை இனிதுறத் தான்அர சாட்சியும்
தையலர் தம் முறவும்-இனி
இந்த உலகில் விரும்புகி லேன் என்றது
எம்அனை செய்த உள்ளம்.   9

அன்பு சிவம்உல கத்துயர் யாவையும்
அன்பினிற் போகும் என்றே-இங்கு
முன்பு மொழிந்துல காண்டதோர் புத்தன்
மொழிஎங்கள் அன்னை மொழி   10

மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி-தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்லநம் அன்னை மதி.   11

தெய்விகச் சாகுந் தலமெனும் நாடகம்
செய்த தெவர் கவிதை?-அயன்
செய்வ தனைத்தின் குறிப்புணர் பாரத
தேவி அருட் கவிதை.   12

9. எங்கள் தாய் (காவடிச் சிந்தில்ஆறுமுக வடிவேலனே என்ற மெட்டு)

தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும்-இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பின ளாம்எங்கள் தாய்.   1

யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள் தாய்-இந்தப்
பாருள்எந் நாளுமோர் கன்னிகை என்னப்
பயின்றிடு வாள் எங்கள் தாய்.   2
 
முப்பது கோடி முகமுடை யாள்உயிர்
மொய்ம்புற வொன்றுடை யாள்-இவள்
செப்பு மொழிபதி னெட்டுடை யாள், எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.   3

நாவினில் வேத முடையவள் கையில்
நலந்திகழ் வாளுடை யாள்-தனை
மேவினர்க் கின்னருள் செய்பவள் தீயரை
வீட்டிடு தோளுடை யாள்.   4

அறுபது கோடி தடக்கைக ளாலும்
அறங்கள் நடத்துவள் தாய்-தனைச்
செறுவது நாடி வருபவ ரைத்துகள்
செய்து கிடத்துவள் தாய்.   5

பூமி யினும்பொறை மிக்குடை யாள்பெரும்
புண்ணிய நெஞ்சினள் தாய்-எனில்
தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந்
துர்க்கை யனையவள் தாய்.   6

கற்றைச் சடைமதி வைத்த துறவியைக்
கைதொழு வாள்எங்கள் தாய்-கையில்
ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும்
ஒருவனை யுந்தொழு வாள்   7

யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும்
ஒன்றென நன்றறி வாள்-உயர்
போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும்
பொற்குவை தானுடை யாள்.   8

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி
நயம்புரி வாள்எங்கள் தாய்-அவர்
அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின்
ஆனந்தக் கூத்திடு வாள்.   9

வெண்மை வளரிம யாசலன் தந்த
விறன்மக ளாம்எங்கள் தாய்-அவள்
திண்மை மறையினும் தான்மறை யாள்நித்தஞ்
சீருறு வாள் எங்கள் தாய்.

10. வெறிகொண்ட தாய்

ராகம்-ஆபோகி தாளம்-ரூபகம்

1. பேயவள் காண்எங்கள் அன்னை-பெரும்
பித்துடை யாள்எங்கள் அன்னை
காயழல் ஏந்திய பித்தன்-தனைக்
காதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)

2. இன்னிசை யாம்இன்பக் கடலில்-எழுந்து
எற்றும் அலைத்திரள் வெள்ளம்
தன்னிடம் மூழ்கித் திளைப்பாள்-அங்குத்
தாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)

3. தீஞ்சொற் கவிதையஞ் சோலை-தனில்
தெய்விக நன்மணம் வீசும்
தேஞ்சொரி மாமலர் சூடி-மதுத்
தேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)

4. வேதங்கள் பாடுவள் காணீர்-உண்மை
வேல்கையிற் பற்றிக் குதிப்பாள்
ஓதருஞ் சாத்திரம் கோடி-உணர்ந்
தோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)

5. பாரதப் போரெனில் எளிதோ?-விறற்
பார்த்தன்கை வில்லிடை ஒளிர்வாள்
மாரதர் கோடிவந் தாலும்-கணம்
மாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)

11. பாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி

1. பொழுது புலர்ந்தது; யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்;
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி;
தொழுதுனை வாழ்த்தி வணங்குதற்கு இங்குஉன்
தொண்டர்பல் லாயிரர் சூழ்ந்துநிற் கின்றோம்;
விழிதுயில் கின்றனை இன்னும்எம் தாயே!
வியப்பிது காண்!பள்ளி யெழுந்தரு ளாயே!

2. புள்ளினம் ஆர்த்தன; ஆர்த்தன முரசம்;
பொங்கியது எங்குஞ் சுதந்திர நாதம்;
வெள்ளிய சங்கம் முழங்கின,கேளாய்!
வீதியெ லாம்அணு குற்றனர் மாதர்;
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திரு நாமமும் ஓதிநிற் கின்றார்;
அள்ளிய தெள்ளமு தன்னைஎம் அன்னை!
ஆருயிரே!பள்ளி யெழுந்தரு ளாயே!

3. பருதியின் பேரொளி வானிடைக் கண்டோம்;
பார்மிசை நின்னொளி காணுதற்கு அலந்தோம்;
கருதிநின் சேவடி அணிவதற்கு என்றே
கனிவுறு நெஞ்சக மலர்கொடு வந்தோம்;
சுருதிகள் பயந்தனை; சாத்திரம் கோடி
சொல்லரு மாண்பின ஈன்றனை, அம்மே!
நிருதர்கள் நடுக்குறச் சூல்கரத்து ஏற்றாய்!
நிர்மலையே! பள்ளி யெழுந்தரு ளாயே!

4. நின்னெழில் விழியருள் காண்பதற்கு எங்கள்
நெஞ்சகத்து ஆவலை நீயறி யாயோ?
பொன்னனை யாய்! வெண் பனிமுடி யிமயப்
பொருப்பினன் ஈந்த பெருந்தவப் பொருளே!
என்ன தவங்கள்செய்து எத்தனை காலம்
ஏங்குவம் நின்னருட்கு ஏழையம் யாமே?
இன்னமும் துயிலுதி யேல்இது நன்றோ?
இன்னுயி ரே! பள்ளி யெழுந்தரு ளாயே!

5. மதலையர் எழுப்பவும் தாய்துயில் வாயோ?
மாநிலம் பெற்றவள் இஃதுண ராயோ?
குதலை மொழிக்கிரங் காதொரு தாயோ?
கோமக ளே!பெரும் பாரதர்க் கரசே!
விதமுறு நின்மொழி பதினெட்டும் கூறி
வேண்டிய வாறுஉனைப் பாடுதும் காணாய்;
இதமுற வந்துஎமை ஆண்டருள் செய்வாய்!
ஈன்றவ ளே! பள்ளி யெழுந்தரு ளாயே!

12. பாரத மாதா நவரத்தின மாலை

(ஒன்பது ரத்தினங்களின் பெயர்கள் மறைபொருளாகவோ, நேரிடையாகவோ இப்பாடலுள் வழங்கப்படுகின்றன.)

காப்பு

வீரர்முப் பத்திரண்டு கோடி விளைவித்த
பாரதமா தாவின் பதமலர்க்கே-சீரார்
நவரத்ன மாலையிங்கு நான்சூட்டக் காப்பாம்
சிவரத்ன மைந்தன் திறம்.

வெண்பா

திறமிக்க நல்வயிரச் சீர்திகழும் மேனி
அறமிக்க சிந்தை அறிவு-பிறநலங்கள்
எண்ணற் றனபெறுவார்இந்தியா என்றநின்றன்
கண்ணொத்த பேருரைத்தக் கால்.  1

கட்டளைக் கலித்துறை

காலன் எதிர்ப்படிற் கைகூப்பிக்
கும்பிட்டுக் கம்பனமுற்
றோலமிட் டோடி மறைந்தொழி
வான்;பகை யொன்றுளதோ?
நீலக் கடலொத்த கோலத்தி
னாள்மூன்று நேத்திரத்தாள்
காலக் கடலுக்கோர் பாலமிட்
டாள் அன்னை காற்படினே.   2

எண்சீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்

அன்னையே, அந்நாளில் அவனிக் கெல்லாம்
ஆணிமுத்துப் போன்றமணி மொழிக ளாலே
பன்னிநீ வேதங்கள், உபநிட தங்கள்
பரவுபுகழ்ப் புராணங்கள்,இதிஹா ஸங்கள்
இன்னும்பல் நூல்களிலே இசைத்த ஞானம்
என்னென்று புகழ்ந்துரைப்போம் அதனை இந்நாள்?
மின்னுகின்ற பேரொளிகாண்! காலங் கொன்ற
விருந்துகாண்! கடவுளுக்கோர் வெற்றி காணே.  3

ஆசிரியப்பா

வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
உற்றதிங் கிந்நாள்! உலகினுக் கெல்லாம்
இற்றைநாள் வரையினும், அறமிலா மறவர்,
குற்றமே தமதுமகுடமாக் கொண்டோர்,  

மற்றை மனிதரை அடிமைப் படுத்தலே
முற்றிய அறிவின் மறையென்று எண்ணுவார்;
பற்றை யரசர் பழிபடு படையுடன்
சொற்றை நீதி தொகுத்துவைத் திருந்தார்
இற்றைநாள்

பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
உற்றதிங் கிந்நாள்;உலகெலாம் புகழ
இன்பவ ளம்செறி பண்பல பயிற்றும்
கவீந்திர னாகிய ரவீந்திர நாதன்

சொற்றது கேளீர்!புவிமிசை யின்று
மனிதர்க் கெல்லாம் தலைப்படு மனிதன்,
தர்மமே இருவாம் மோஹன தாஸ
கர்ம சந்திர காந்தியென் றுரைத்தான்.
அத்தகைய காந்தியை அரசியல் நெறியிலே

தலைவனாக் கொண்டு புவிமிசைத் தருமமே
அரசிய லதனிலும், பிறஇய லனைத்திலும்
வெற்றி தருமென வேதம் சொன்னதை
முற்றும் பேண முற்பட்டு நின்றார்,
பாரத மக்கள், இதனால் படைஞர்தம்

செருக்கொழிந் துலகில் அறந்திறம் பாத
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே.
(வெற்றி கூறுமின்: வெண்சங் கூதுமின்!)

தரவு கொச்சகக் கலிப்பா

5. ஊதுமினோ வெற்றி! ஒலிமினோ வாழ்த்தொலிகள்
ஓதுமினோ வேதங்கள்!ஓங்குமினோ!ஓங்குமினோ!
தீதுசிறி தும்பயிலாச் செம்மணிமா நெறிகண்டோம்;
வேதனைகள் இனி வேண்டா; விடுதலையோ திண்ணமே.

வஞ்சி விருத்தம்

6. திண்ணங் காணீர்!பச்சை
வண்ணன் பாதத் தாணை;
எண்ணம் கெடுதல் வேண்டா!
திண்ணம், விடுதலை திண்ணம்.

கலிப்பா

7. விடுத லைபெறு வீர்விரை வாநீர்
வெற்றி கொள்ளுவீர் என்றுரைத் தெங்கும்
கெடுத லின்றிநந் தாய்த்திரு நாட்டின்
கிளர்ச்சி தன்னை வளர்ச்சிசெய் கின்றான்;
சுடுத லும்குளி ரும்உயிர்க் கில்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக் கில்லை;
எடுமி னோஅறப் போரினை என்றான்
எங்கோ மேதக மேந்திய காந்தி!

அறுசீர் விருத்தம்

8. காந்திசேர் பதும ராகக் கடிமலர் வாழ்ஸ்ரீ தேவி
போந்துநிற் கின்றாள்இன்று பாரதப் பொன்னாடெங்கும்;
மாந்த ரெல்லோரும் சோர்வை அச்சத்தை மறந்த விட்டார்
காந்திசொற் கேட்டார், காண்பார் விடுதலை கணத்தினுள்ளே.

எழுசீர்க் கழிநெடி லாசிரிய விருத்தம்

9. கணமெனு மென்றன் கண்முனே வருவாய்,
பாரத தேவியே, கனல்கால்
இணைவிழி வால வாய மாஞ் சிங்க
முதுகினில் ஏறிவீற் றிருந்தே;
துணைநினை வேண்டும் நாட்டினர்க் கெல்லாம்
துயர்கெட விடுதலை யருளி
மணிநகை புரிந்து திகழ்திருக் கோலம்
கண்டுநான் மகிழ்ந்திடு மாறே.

13. பாரத தேவியின் திருத்தசாங்கம்

நாமம் (காம்போதி)

பச்சை மணிக்கிளியே!பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்!-இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.   1

நாடு (வசந்தா)

தேனார் மொழிக்கிள்ளாய்!தேவியெனக் கானந்த
மானாள்பொன் னாட்டை அறிவிப்பாய்! வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.   2

நகர் (மணியரங்கு)

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்னையுற வாழும் நகரெ துகொல்?-சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.   3

ஆறு (சுருட்டி)

வன்னக் கிளி!வந்தே மாதரமென் றே துவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்!-நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன் விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.  4

மலை (கானடா)

சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்!-ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.  5 

மலை (கானடா)

சீருஞ் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்!-தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சுகம்
அரிமிசையே ஊர்வாள் அவள்.   6

ஊர்தி (தன்யாசி)

கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்!
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்?-பொரு(பவர்மேல்
தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு.  7

படை (முகாரி)

ஆசை மரகதமே!அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்!-பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.   8

தார் (பிலக்ரி)

வாராய் இளஞ்சுகமே!வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுமணித் தார்கூறாய்!-சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.   9

கொடி (கேதாரம்)

கொடிப்பவள வாய்ககிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடி தான் மற்றென்?-அடிப்(பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.   10

14. தாயின் மணிக்கொடி

(பாரத நாட்டுக் கொடியினைப் புகழ்தல். தாயுமானவர் ஆனந்தக்களிப்பு மெட்டு)

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

1. ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
உச்சியின் மேல்வந்தே மாதரம்என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

2. பட்டுத் துகிலென லாமோ?-அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகந்தடித் தாலும்-அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம் (தாயின்)

3. இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

4. கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் (தாயின்)

5. அணியணி யாயவர் நிற்கும்-இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

6. செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

7. கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர். (தாயின்)

8. பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

9. பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும். (தாயின்)

10. சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

15.பாரத ஜனங்களின் தற்கால நிலைமை

நொண்டிச் சிந்து

1. நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்,
அஞ்சி யஞ்சிச் சாவார்-இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே;
வஞ்சனைப் பேய்கள் என்பார்-இந்த
மரத்தில் என்பார்;அந்தக் குளத்தில் என்பார்;
துஞ்சுவது முகட்டில் என்பார்-மிகத்
துயர்ப்படு வார் எண்ணிப் பயப்படுவார். (நெஞ்சு)

2. மந்திர வாதி என்பார்-சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்;
யந்திர சூனியங் கள்-இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்!
தந்த பொருளைக் கொண்டே-ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்;
அந்த அரசிய லை-இவர்
அஞ்சதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர் வார் (நெஞ்சு)

3. சிப்பாயைக் கண்டு அஞ்சு வார்-ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம்பதைப் பார்;
துப்பாக்கி கொண்டு ஒருவன்-வெகு
தூரத்தில் வரக்கண்டு வீட்டிலொளிப் பார்;
அப்பால் எவனோ செல்வான்-அவன்
ஆடையைக் கண்டுபயந் தெழுந்துநிற் பார்;
எப்போதும் கைகட்டு வார்-இவர்
யாரிடத்தும் பூனைகள்போல் ஏங்கிநடப் பார் (நெஞ்சு)

4. நெஞ்சு பொறுக்கு திலையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட் டால்,
கொஞ்சமோ பிரிவினை கள்?-ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?
ஐந்துதலைப் பாம்பென் பான்-அப்பன்
ஆறுதலை யென் றுமகன் சொல்லிவிட் டால்
நெஞ்சு பிரிந்திடு வார்-பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப் பார். (நெஞ்சு)

5. சாத்திரங்கள் ஒன்றும் காணார்-பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே
கோத்திரம் ஒன் றாயிருந்தா லும்-ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ் வார்
தோத்திரங்கள் சொல்லி அவர்தாம்-தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடு வார்;
ஆத்திரங்கொண் டேஇவன் சை வன்-இவன்
அரிபக்தன் என்றுபெருஞ் சண்டையிடு வார். (நெஞ்சு)

6. நெஞ்சு பொறுக்கு திலையே-இதை
நினைந்து நினைந்திடினும் வெறுக்கு திலையே
கஞ்சி குடிப்பதற் கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமி லார்.
பஞ்சமோ பஞ்சம் என்றே-நிதம்
பரிதவித் தேஉயிர் துடிதுடித் தே
துஞ்சி மடிக்கின் றாரே-இவர்
துயர்களைத் தீர்க்கவோர் வழியிலை யே (நெஞ்சு)

7. எண்ணிலா நோயுடை யார்-இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையி லார்
கண்ணிலாக் குழந்தை கள்போல்-பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக்கொள் வார்;
நண்ணிய பெருங்கலை கள்-பத்து
நாலாயிரங் கோடி நயந்துநின் ற
புண்ணிய நாட்டினி லே-இவர்
பொறியற்ற விலங்குகள் போலவாழ் வார் (நெஞ்சு)

16.போகின்ற பாரதமும்-வருகின்ற பாரதமும்
(போகின்ற பாரதத்தைச் சபித்தல்)

1. வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பி லேஓ டுங்கினாய் போ போ போ
பொலிவி லாமு கத்தினாய் போ போ போ
பொறி யிழந்த விழியினாய் போ போ போ
ஒலியி ழந்த குரலினாய் போ போ போ
ஒளியி ழந்த மேனினாய் போ போ போ
கிலிபி டித்த நெஞ்சினாய் போ போ போ
கீழ்மை யென்றும் வேண்டுவாய் போ போ போ

2. இன்று பார தத்திடை நாய்போலே
ஏற்ற மின்றி வாழுவாய் போ போ போ
நன்று கூறி லஞ்சுவாய் போ போ போ
நாணி லாது கெஞ்சுவாய் போ போ போ
சென்று போன பொய்யெலாம் மெய்யா கச்
சிந்தை கொண்டு போற்றுவாய் போ போ போ
வென்று நிற்கும் மெய்யெலாம் பொய்யாக
விழிம யங்கி நோக்குவாய் போ போ போ

3. வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
நூறு நூல்கள் போற்றுவாய், மெய்கூ றும்
நூலி லொத்தி யல்கிலாய் போ போ போ
மாறு பட்ட வாதமே ஐந்நூறு
வாயில் நீள ஓதுவாய் போ போ போ
சேறு பட்ட நாற்றமும் தூறுஞ் சேர்
சிறியவீடு கட்டுவாய் போ போ போ

4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் போ போ போ
நீதி நூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டி னால்வ ணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத் தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ

வருகின்ற பாரதத்தை வாழ்த்தல்

5. ஒளிப டைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிப டைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல்ந டையினாய் வா வா வா

6. மெய்மை கொண்ட நூலையே அன்போடு
வேத மென்று போற்றுவாய் வா வா வா
பொய்மை கூற லஞ்சுவாய் வா வா வா
பொய்மை நூல்க ளெற்றுவாய் வா வா வா
நொய்மை யற்ற சிந்தையாய் வா வா வா
நோய்க ளற்ற உடலினாய் வா வா வா
தெய்வ சாபம் நீங்கவே,நங்கள் சீர்த்
தேச மீது தோன்றுவாய் வா வா வா

7. இளைய பார தத்தினாய் வா வா வா
எதிரி லாவ லத்தினாய் வா வா வா
ஒளியி ழந்த நாட்டிலே நின்றேறும்
உதய ஞாயி றொப்பவே வா வா வா
களையி ழந்த நாட்டிலே முன்போலே
களைசி றக்க வந்தனை வா வா வா
விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல்
விழியி னால்வி ளக்குவாய் வா வா வா

8. வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
விநயம் நின்ற நாவினாய் வா வா வா
முற்றி நின்ற வடிவினாய் வா வா வா
முழுமை சேர்மு கத்தினாய் வா வா வா
கற்ற லொன்று பொய்க்கிலாய் வா வா வா
கருதிய தியற் றுவாய் வா வா வா
ஒற்று மைக்கு ளுய்யவே நாடெல் லாம்
ஒருபெ ருஞ்செயல் செய்வாய் வா வா வா

17.பாரத சமுதாயம்

ராகம்-பியாக்  தாளம்-திஸ்ர ஏகதாளம்

பல்லவி

பாரத சமுதாயம் வாழ்கவே!-வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே!-ஜய ஜய ஜய (பாரத)

அனுபல்லவி

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை-வாழ்க (பாரத)

சரணங்கள்

1. மனித ருணவை மனிதர் பறிக்கம்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு;
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின் றித்தரு நாடு-இது
கணக்கின் றித்தரு நாடு-நித்த நித்தம்
கணக்கின் றித்தரு நாடு-வாழ்க! (பாரத)

2. இனியொரு விதிசெய் வோம்-அதை
எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்-வாழ்க! (பாரத)

3. எல்லா உயிர்களிலும் நானே யிருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்;

எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம்
இந்தியா உலகிற் களிக்கும்-ஆம் ஆம்,
இந்தியா உலகிற் களிக்கும்-வாழ்க! (பாரத)

4. எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்தியா மக்கள்,

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்-வாழ்க (பாரத)

18.ஜாதீய கீதம்-1

(பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய
வந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு)

1. இனிய நீர்ப் பெருக்கினை!இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை! (வந்தே)

2. வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை!
குறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை!
நல்வகை இன்பம், வரம்பல நல்குவை! (வந்தே)

3. முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்
அறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்
திறனிலாள் என் றுனை யாவனே செப்புவன்?
அருந்திற லுடையாய்!அருளினை போற்றி?
பொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை! (வந்தே)

4. நீயே வித்தை, நீயே தருமம்!
நீயே இதயம், நீயே மருமம்!
உடலகத் திருக்கும் உயிருமன் நீயே! (வந்தே)

5. தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே!
சித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே!
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்விக வடிவமும் தேவிஇங் குனதே! (வந்தே)

6. ஒருபது படைகொளும் உமையவள் நீயே!
கமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ!
வித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ! (வந்தே)

7. போற்றி வான்செல்வீ! புரையிலை, நிகரிலை!
இனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை!
சாமள நிறத்தினை, சரளமாந் தகையினை!
இனியபுன் முறுவலாய்! இலங்குநல் லணியினை!
தரித்தெமைக் காப்பாய், தாயே! போற்றி! (வந்தே)

19. ஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)

1. நளிர்மணி நீரும், நயம்படு கனிகளும்
குளிர்பூந் தென்றலும் கொழும்பொழிற் பசுமையும்
வாய்ந்துநன் கிலகுவை வாழிய அன்னை! (வந்தே)

2. தெண்ணில வதனிற் சிலிர்த்திடும் இரவும்
தண்ணியல் விரிமலர் தாங்கிய தருக்களம்
புன்னகை ஒளியும் தேமொழிப் பொலிவும்
வாய்ந்தனை, இன்பமும் வரங்களும் நல்குவை, (வந்தே)

3. கோடி கோடி குரல்கள் ஒலிக்கவும்
கோடி கோடி புயத்துணை கொற்றமார்
நீடு பல்படை தாங்கிமுன் நிற்கவும்
கூடு திண்மை குறைந்தனைஎன்பதென்?
ஆற்றலின் மிகுந்தனை,அரும்பதங் கூட்டுவை
மாற்றலர் கொணர்ந்த வன்படை யோட்டுவை (வந்தே)

4. அறிவுநீ,தருமம்நீ, உள்ளம்நீ, அதனிடை
மருமம்நீ,உடற்கண் வாழ்ந்திடும் உயிர்நீ;
தோளிடை வன்புநீ நெஞ்சகத்து அன்புநீ
ஆலயந் தோறும் அணிபெற விளங்கும்
தெய்வச் சிலையெலாம்,தேவி,இங்குனதே. (வந்தே)

5. பத்துப் படைகொளும் பார்வதி தேவியும்
கமலத் திகழ்களிற் களித்திடும் கமலையும்
அறிவினை யருளும் வாணியும் அன்னை நீ! (வந்தே)

6. திருநி றைந்தனை, தன்னிக ரொன்றிலை!
தீது தீர்ந்தனை, நீர்வளஞ் சார்ந்தனை;
மருவு செய்களின் நற்பயன் மல்குவை,
வளனின் வந்ததோர் பைந்நிறம் வாய்ந்தனை
பெருகு மின்ப முடையை குறுநகை
பெற்றொ ளிர்ந்தனை, பல்பணி பூண்டனை;
இருநி லத்துவந் தெம்முயிர் தாங்குவை,
எங்கள் தாய்நின் பதங்கள் இறைஞ்சுவாம்! (வந்தே)

 
மேலும் தேசீய கீதங்கள் »
temple news

2. தமிழ் நாடு ஜனவரி 21,2012

1. செந்தமிழ் நாடு 1. செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்தந்தையர் ... மேலும்
 
temple news

3. சுதந்திரம் ஜனவரி 21,2012

1. சுதந்திரப் பெருமை தில்லை எவளியிலே கலந்துவிட் டாலவர்திரும்பியும் வருவாரோ?"என்னும் வர்ணமெட்டு) 1. வீர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar