“உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. உமது அலைகளும், திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டு போகிறது” என்று பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது. பயங்கர வெள்ளம் வரும் வேளையில், நதியில் விழுந்து விட்ட ஒருவனின் நிலையை இந்த வசனம் சுட்டிக்காட்டுகிறது. வெள்ளத்தில் சிக்கிய மனிதன் பல சிரமங்களுக்கு ஆளாவான். அவனை அலைகள் அடித்துச் சென்று பாறைகளில் மோத வைக்கும். மதகுகள் உள்ள பகுதியில் ஆழத்தில் மூழ்கடிக்கும். எப்படி தப்புவது என்றே அவனுக்குத் தெரியாது. நன்றாக நீச்சல் தெரிந்தவன் கூட, தண்ணீரின் சக்தி தாளாமல், முட்டி மோதி காயமடைவான். சில சமயங்களில் உயிரே போய் விடும். இப்படி, தண்ணீரில் சிக்கிய ஒருவன், எப்படி நெருக்கடிக்கு ஆளாகிறானோ, அதுபோல், வாழ்க்கையில் பல நெருக்கடிகள் சூழ்கின்றன. இச்சமயத்தில், தேவனை நாம் நினைத்தால், அவர் அரணாக நின்று பாதுகாப்பளிப்பார். தேவனே நம்மை நெருக்கடியான சூழ்நிலைகளில் மீட்க வல்லவர். ஜெபிப்பவர்களை அவர் கைவிடுவதில்லை.