பதிவு செய்த நாள்
21
ஜூலை
2018
11:07
சென்னை: ஆடி மாதத்தின் முதல் வெள்ளியான நேற்று, சென்னை மற்றும் புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில், ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். பாலாபிஷேகம் ஆடி மாதத்தில், அம்மன் வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. அதில், ஆடி மாத முதல் வெள்ளிக் கிழமையான நேற்று, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில், ஏராளமான பெண்கள் குவிந்தனர். சென்னையில் உள்ள மயிலாப்பூர் முண்டகக்கண்ணியம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருமுல்லைவாயில் பச்சையம்மன், பிராட்வே காளிகாம்பாள், மயிலாப்பூர் கோலவிழியம்மன், மடிப்பாக்கம் பொன்னியம்மன் உள்ளிட்ட பல் வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, லங்காரம் செய்யப்பட்டது. சில கோவில்களில், பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.
விளக்கு பூஜை: அதிகாலை முதலே கோவில்களில் குவிந்த பெண்கள், புற்றுக்கு பால் வார்த்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனர். பின், பொங்கல் வைத்து குலவை போட்டனர். மாவிளக்கு, கூழ் வார்த்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட ஏராளமான பக்தர்கள், சக பக்தர்களுக்கு வினியோகித்தனர். சிலர், அலகு குத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மாலையில், திருவிளக்கு பூஜைகள் நடத்தப்பட்டன.