பதிவு செய்த நாள்
13
ஆக
2018
10:08
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று, வள்ளி மணவாள பெருமானுக்கு, திருக்கல்யாண மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், திருக்கல்யாணத்தை காண குவிந்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது, சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். திருமண தடை நீக்கும் திருத்தலம் என, இத்திருத்தலம் பக்தர்களால் போற்றப்படுகிறது.
சென்னையைச் சேர்ந்த, அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினர் சார்பில், சிறுவாபுரியில், வள்ளி மணவாள பெருமான் திருக்கல்யாண மகோற்சவம், நேற்று நடைபெற்றது. அதை முன்னிட்டு, வள்ளி மணவாள பெருமானுக்கு பழம், தேன், பால், சந்தனம் உட்பட சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி மணவாளனுக்கு, திருக்கயிலாய வாத்தியம் முழங்க, திருக்கல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.திருமண வரன் வேண்டி பங்கேற்ற, இருபாலின பக்தர்கள், வள்ளி மணவாளனுக்கு சாத்தப்பட்ட மாலையை, பிரசாதமாக பெற்றுக் கொண்டனர். உள்புறப்பாடு சென்ற வள்ளி மணவாளனை, பின் தொடர்ந்தபடி பக்தர்கள் சென்றனர். திருக்கல்யாண மகோற்சவத்தைக் காண, ஏராளமான பக்தர்கள் சிறுவாபுரியில் குவிந்தனர். பக்தர்கள் அனைவருக்கும், சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.