ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாணம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழா ஆக.,4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 12ம் நாள் விழாவான நேற்று கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கார மேடையில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் மந்திரம் முழங்க இரவு 7:50 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்து, ஆடித்திருக்கல்யாணம் நடந்தது. பின் சுவாமி, அம்மனுக்கு மகாதீபாரதனை நடந்ததும், கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் குமரன் சேதுபதி, கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார்கள் உட்பட பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் யாத்திரை பணியாளர்கள் சங்கம், ஆன்மிக அமைப்பினர் பக்தருக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள் பிரசாதம் வழங்கினர்.