உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் மழை வேண்டி முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. உளுந்துார்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில், மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும், குடும்பம் செழிக்கவும் முளைப்பாரி மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. இதில், 150 கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் நெல் விதைத்து 9 நாட்கள் விரதம் இருந்து, 9ம் நாளான நேற்று காலை முளைப்பாரியாக ஸ்ரீசாரதா ஆசிரமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசாரதா அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீசாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து தீபாரதனை செய்தார். அதனை தொடர்ந்து சேவா பிரதிஷ்டான் இயக்குநர் யத்தீஸ்வரி ஆத்ம விகாச ப்ரியா அம்பா முளைப்பாரியினை பெண் பக்தர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 150 கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வழிப்பட்டனர்.