பதிவு செய்த நாள்
04
செப்
2018
05:09
கடலுார்: கடலுார், புதுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி உறியடி திருவிழா நடந்தது. கடலுார், புதுப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது, புதுப்பாளையம் நான்குமுனை சந்திப்பில் உறியடி விழா நடந்தது. ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் உறியடித்தனர்.
சிறுபாக்கம்: சிறுபாக்கம் வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் பெருமாளுக்கு காலையில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் உறியடியும், வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி வீதியுலா வந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கம்மாபுரம்: தேவங்குடி கோதண்டராமன் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சுவாமிக்கு அபிேஷக ஆராதனையும், தொடர்ந்து, பஜனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி அருள்பாலித்தார். தொடர்ந்து, சுவாமிக்கு அமுதப்படையல், உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோன்று, கோபாலபுரம், ஊ.அகரம் கோதண்டராமன் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
பெண்ணாடம்: வேதவல்லி தாயார் சமேத வேத நாராயண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை 7:00 மணியளவில் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், மஞ்சள் ஆகிய பொருட்களால் அபிஷேகம்; 8:00 மணியளவில் தீபாராதனை நடந்தது. மாலை 5:30 மணியளவில் அபிஷேகம், 6:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. 6:30 மணியளவில் கோவில் முன்பு உறியடி உற்சவம் நடந்தது. அதேபோல், ஈச்சங்காடு லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை, உறியடி உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.