பதிவு செய்த நாள்
05
செப்
2018
11:09
திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா நேற்று(செப்., 4ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. செப்.12 ல் தேரோட்டமும், சந்தனக்காப்பு அலங்காரத்தில் விநாயகர் எழுந்தருளலும் நடைபெறும்.
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம்.நேற்று (செப்., 4ல்) காலை 11:00 மணிக்கு மூஷிக படம் தாங்கிய கொடி கோயில் திருவீதி வலம் வந்தது. தொடர்ந்து கொடிமரம் அருகே மூஷிக வாகனத்தில் உற்ஸவர், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 11:40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர் திருவீதி உலா நடந்தது.
சந்தனக்காப்பு : நாளை (செப்., 6ல்) முதல் எட்டாம் திருநாள் வரை காலை 9:30 மணி அளவில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.செப்.,9 மாலை 5:00 மணிக்கு கஜமுகா சூரசம்ஹாரமும், செப்.,12ல் மாலை தேரோட்டமும் நடைபெறும். அன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூலவர் சந்தனக்காப்பில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இந்த அலங்காரம் நடைபெறும்.பத்தாம் திருநாளான விநாயகர் சதுர்த்தியன்று காலையில் கோயில் திருக்குளத்தில் தீர்த்தவாரி, மதியம் திருமுக்கூரணி மோதக கொழுக்கட்டை படையல், இரவில் ஐம்பெரும் கடவுளர் திருவீதி உலாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும்.முன்னதாக புதிய சிம்ம வாகனத்திற்கான சிறப்பு பூஜை நடந்து, விநாயகர் வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெற்றது. ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள் கோனாபட்டு அருணாசலம் செட்டியார் மற்றும் அரிமளம் சிதம்பரம் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.