பதிவு செய்த நாள்
29
செப்
2018
10:09
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு திருப்பதிa ஏழு மலையான் கோயிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பட்டு சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பதி புரட்டாசி பிரம்மோத்ஸவத்தின் ஐந்தாம் நாளன்று ஏழுமலையான் சாற்றி கொள்வதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிகளைந்த மாலை, கிளி, வஸ்திரம் கொண்டு செல்வது வழக்கம். இதற்கு எதிர்சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலிலிருந்து ஆண்டாளுக்கு பட்டு கொடுத்தனுப்புவார்கள். அதன்படி கடந்த செப்.15 அன்று திருப்பதி ஏழுமலையானுக்கு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலிலிருந்து சீர் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு எதிர் சீராக ஏழுமலையான் சாற்றி கொடுத்த பட்டு மற்றும் மங்களபொருட்கள், இரண்டு குடைகள் ஆண்டாளுக்கு கொண்டு வரபட்டது.
இதை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றும் நிகழ்ச்சி நேற்றிரவு 7 :00 மணிக்கு ஆண்டாள் கோயிலில் நடந்தது. ஸ்தானிகம் ரமேஷ் வீட்டிலிருந்து கோயில் மரியாதையுடன் யானை முன்செல்ல பட்டு, மங்களபொருட்கள், குடைகள் கொண்டு வரப்பட்டது. வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு சாற்றி, சிறப்பு பூஜைகளை தேவராஜ் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். செயல் அலுவலர் இளங்கோவன், வேதபிரான் அனந்தராமன், சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ் மற்றும் பட்டர்கள், கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.