பதிவு செய்த நாள்
08
அக்
2018
11:10
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில், புற்றீசல்களாக உருவாகி வரும் கைடுகளால், பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில், 22 தீர்த்தம் நீராடும் பக்தருக்கு, கோவில் நிர்வாகம், 25 ரூபாய் வசூலிக்கிறது. கிணற்றில் இருந்து புனிதநீரை பக்தருக்கு ஊற்றும், யாத்திரை பணியாளருக்கு, அதில், 12 ரூபாயை, கோவில் நிர்வாகம் வழங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நீராடவும், தரிசனத்திற்கும் வரும் பக்தர்களிடம், யாத்திரை பணியாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. ஆனால், தற்போது சிறப்பு தரிசனத்திற்கு பக்தர்களை அழைத்து செல்ல, அரசுதுறை ஊழியர்கள், வெளிநபர்கள் பலர், புற்றீ சலாய் கிளம்பியுள்ளனர்.இவர்கள், தங்களுடன் அழைத்து வருபவர்களை, உயர் அதிகாரிகளின் உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் என, பொய்யான தகவலை கூறி, தரிசிக்க வைத்து, பக்தர்களிடம் பணம் கறக்கின்றனர். இதற்கு, கோவில் ஊழியர்கள் சிலரும் உடந்தையாக உள்ளனர். ஆனால், ஏழை பக்தர்கள், வழக்கம் போல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.இதை முறைப்படுத்துவதற்கு ஹிந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, கோவில் இணை ஆணையர், மங்கையர்கரசி உத்தரவுபடி, சிறப்பு தரிசனம் செய்ய வருவோர் யார், எத்தனை பேர், பக்தரை அழைத்து வந்தவர் யார் என்ற விபரத்தை, புத்தகத்தில் பதிவு செய்கின்றனர். இவ்விஷயத்தில், கோவில் ஊழியர்கள் உறுதியாக இருந்தால், புற்றீசலாய் கிளம்பிய கைடுகளை தடுக்க முடியும் என, இந்து அமைப்பினர் தெரிவித்தனர்.