பதிவு செய்த நாள்
14
அக்
2018
01:10
திருப்பதி:திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாள் காலை மலையப்பஸ்வாமி கல்பவிருட்ச வாகனத்தில், மாடவீதியில் வலம் வந்தார். திருமலையில், கடந்த புதன்கிழமை முதல் நவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன், 4ம் நாளான, நேற்று காலை, கல்பவிருட்ச வாகனத்தில், மலையப்பஸ்வாமி மன்னார்குடி ராஜகோபாலன் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். அதன்பின், மதியம் ஸ்நபன திருமஞ்சனமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடந்தது.இரவு, 8 மணிக்கு தங்கத்தால் ஆன சர்வபூபால வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்பஸ்வாமி வலம் வந்தார்.
இதை காண, லட்சகணக்கான பக்தர்கள் மாடவீதியில் கூடினர். இதில், தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவைக்கு முன், நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களை பாடியபடி திருமலை ஜீயர் குழாம் செல்ல, வாகன சேவைக்கு பின் நாடெங்கிலுமிருந்து வந்த கலை குழுவினர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். வாகன சேவைக்கு முன் கல்பவிருட்ச மற்றும் சர்வபூபால வாகன சேவை புகைப்படங்கள் கொண்ட அஞ்சல் உறைகள் வெளியிடப்பட்டது.