“சுவாமி... சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர், அம்பாளின் பக்தர் தானே” எனக் கேட்டார் பக்தர் ஒருவர். “தீட்சிதர் முருகபக்தரும் கூட. அவர் ஒருமுறை திருத்தணி வந்த போது கிழவர் ஒருவர் ’முத்துசுவாமி’ என பெயர் சொல்லி அருகில் அழைத்து, தீட்சிதரின் வாயில் கல்கண்டு துண்டை திணித்து விட்டு மறைந்தார். கிழவராக வந்தவர் திருத்தணி முருகனே என்பதை உணர்ந்த தீட்சிதரின் உள்ளம் உருகியது. முருகன் மீது எட்டுக் கீர்த்தனைகள் பாடினார். ’சுப்ரம்மண்யாய நமஸ்தே’ என்னும் இந்த பாட்டில் ’கோடி கோடி மன்மதர்கள் போல அழகானவன் முருகன்’ என்கிறார். ’முருகன்’ என்றாலே ’அழகன்’ என்பது பொருள். கோடியைக் கோடியால் பெருக்கினால் எவ்வளவு பெரிசு? அழகே வடிவான மன்மதர்கள் கோடிக்கணக்கில் ஒன்று சேர்த்தது போன்ற பேரழகன் அவன்!
சிவனின் நெற்றிக் கண்ணில் தோன்றிய நெருப்பு மன்மதனை எரித்தது. அதே கண்ணில் தோன்றிய நெருப்பிலிருந்தே முருகன் தோன்றினான். மன்மதனை தகனம் பண்ணியவரின் மைந்தன் கோடிகோடி மன்மதனாக விளங்குவது சிறப்பு தானே! ராம, லட்சுமணருக்கு முருகனின் பெருமைகளை எடுத்துச் சொன்னவர் விஸ்வாமித்திரர். ’குமார சம்பவம்’ என்னும் இதைக் கேட்டால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிடுகிறது வால்மீகி ராமாயணம். வால்மீகியின் வாக்கில் உதித்த ’ குமார சம்பவம்’ என்பதை தன் காவியத்தின் பெயராக வைத்தார் காளிதாசர். முருகன் வரலாறை விரிவாகச் சொல்லும் நூல் இது. ’மாரன்’ என்றால் மன்மதன். ’குமாரன்’ என்றால் ’மன்மதனைப் பழிக்கும் அழகுடையவன்’ இதனால் முருகனைக் ’குமாரன்’ என அழைக்கிறோம். புறம் மட்டுமில்லாமல் அகத்திலும் அழகு மிக்கவன் முருகன். துன்பப்படுபவர்கள், ஏழைகளை ’தீனர்கள்’ எனச் சொல்வர். இவர்களை காப்பவன் என்பதால் முருகனை ’தீன சரண்யன்’ என்கிறார் தீட்சிதர். கந்தசஷ்டி விரத நாளில் வழிபட்டால் விருப்பங்களை நிறைவேற்ற முன்நிற்பான் முருகன்” என்றார் காஞ்சி மகாபெரியவர். திருப்பூர் கிருஷ்ணன்